அடுத்த முப்படை தலைமை தளபதி யார்? விரைவில் நியமனம் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு
டெல்லி: இந்தியாவின் முப்படைகளில் தலைமை தளபதி விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளார் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
இந்தியாவில் ராணுவம், விமானப்படை, கப்பற்படைக்கு தனித்தனியே தளபதிகள் உள்ளனர். இந்நிலையில் முப்படைகளையும் இணைத்து ராணுவ நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் வகையில் முப்படை தலைமை தளபதி பொறுப்பு உருவாக்கப்பட்டது.
இந்த பொறுப்பில் முதன் முதலாக ஜெனரல் பிபின் ராவத் நியமனம் செய்யப்பட்டார். இவர் 2019 டிசம்பர் 31 முதல் மூன்றாண்டுகள் வரை தொடர்ந்து பணி செய்து வந்தார்.

விமான விபத்தில் மரணம்
இந்நிலையில் தான் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8 ம் தேதி தமிழ் நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் இறந்தார். தற்போது 6 மாதங்களாக இந்த பொறுப்பில் யாரும் நியமிக்கப்படவில்லை. தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் முப்படை தலைமை தளபதி நியமனத்துக்கான விதியில் சமீபத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

விதியில் திருத்தம்
அதன்படி முப்படைகளில் ஏதேனும் ஒன்றில் தளபதியாக இருந்தவர்களில் ஒருவர் 62 வயது நிரம்பாமல் இருந்தாலும் இந்த பொறுப்புக்கு நியமிக்கப்படலாம் என்ற விதி இருந்தது. இது தற்போது மாற்றப்பட்டுள்ளது. அதன்படி 62 வயது நிரம்பிய ஓய்வு அல்லது பணியில் உள்ள லெப்டினனென்ட் ஜெனரல், ஏர் மார்ஷல், துணை அட்மிரல்கள் மட்டுமே முப்படை தலைமை தளபதியாக பொறுப்பேற்க தகுதி உடையவர்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 3 ஸ்டார், 4 ஸ்டார் கொண்ட அதிகாரிகளும் தகுதியுடையவர்களாவர்.

பொறுப்பு என்ன?
இந்த பொறுப்பில் உள்ள முப்படைகள் தொடர்பான ராணுவ விவகாரங்கள் சம்பந்தமான முடிவுகளை எடுத்து செயல்படுத்துவார். இதனால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவியாகும். அதோடு, முப்படைகளில் மிகவும் உயர்வான பதவியாகவும் கருதப்பட்டு வருகிறது. இதனால் முப்படை தலைமை தளபதி பதவியை பெற அதிகாரிகள் விரும்புகின்றனர்.

விரைவில் நியமனம்
இதனால் விரைவில் முப்படை தலைமை தளபதி நியமனம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் முப்படை தளபதிகளுடன் சேர்ந்து அக்னிபாத் திட்டம் குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று விளக்கம் அளித்தார். அப்போது அவரிடம் முப்படை தலைமை தளபதி நியமனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‛‛ முப்படை தலைமை தளபதி விரைவில் நியமனம் செய்யப்படும். இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது'' என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications