ஆதாரம் கேட்டால் பதில் இல்லை.. ஓட்டுகளை திருட முடியுமா? ராகுலை விளாசிய தலைமை தேர்தல் ஆணையர்
டெல்லி: லோக்சபா தேர்தலில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்கள் மற்றும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்களின் வாக்குச்சாவடி முகவர்கள் தேர்தல் பணிக்காக பணியாற்றினர். இப்படி வெளிப்படையான முறையில், இவ்வளவு மக்கள் முன்னிலையில் நடத்தப்படும் இந்த செயல்முறையில் வாக்குகளை திருட முடியுமா? என்று ராகுல் காந்திக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கேள்வி எழுப்பி உள்ளதோடு, ஆதாரம் கேட்டால் பதில் இல்லை என சாடியுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு இன்று தேர்தல் ஆணையம் பதிலளித்தது.

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்தார். அவரது பெயரை கூறாமல் ஞானேஷ் குமார் கூறியதாவது:
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்திய குடிமகனும் வாக்காளராக மாற வேண்டும். வாக்களிக்கவும் வேண்டும். சட்டப்படி ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதன் மூலமாக தான் பிறக்கின்றன. பிறகு எப்படி அரசியல் கட்சிகளுக்கு இடையே தேர்தல் ஆணையம் பாகுபாடு காட்ட முடியும்? தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை அனைவரும் சமம். யார் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், தேர்தல் ஆணையம் அதன் அரசியலமைப்பு கடமையில் இருந்து பின்வாங்காது.
நம் நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தம் ஒன்றும் புதிதல்ல. இதுவரை 12 முறை நடந்துள்ளது பீகாரின் ஏழு கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்துடன் உள்ளனர். வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் கடந்த 20 ஆண்டுகளாக கோரி வந்தன. வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து சில கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழங்கி உள்ளோம்.
சிலர் இரட்டை வாக்களிப்பு நடந்ததாக கூறினர். ஆதாரம் கேட்டபோது எந்த பதிலும் இல்லை. வாக்கு திருட்டு போன்ற குற்றச்சாட்டுகளுக்கு நாங்கள் ஒருபோதும் இரையாக மாட்டோம். தேர்தல் ஆணையம் பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு பயப்படுவது இல்லை. ஓட்டு திருட்டு என்ற வார்த்தைகள் அரசியலமைப்பை அவமதிப்பது வகையில் உள்ளது.
லோக்சபா தேர்தலின்போது ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி செய்தனர். 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்கள் மற்றும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்களின் வாக்குச்சாவடி முகவர்கள் தேர்தலுக்கு பணியாற்றினர். இவ்வளவு வெளிப்படையான நடைமுறையில் இவ்வளவு மக்கள் முன்னிலையில் நடத்தப்படும் இந்த செயல்பாட்டில் வாக்குகளை எப்படி திருட முடியும்?'' என்று கூறினார்.












Click it and Unblock the Notifications