லடாக்கில் சீனா 38,000 சதுர கி.மீ ஆக்கிரமிப்பு.. அருணாச்சல பிரதேசத்திலும் அத்துமீறல்- ராஜ்நாத் சிங்
டெல்லி: லடாக்கில் இந்திய நிலத்தை ஆக்கிரமித்தது மட்டுமில்லை, அருணாச்சலப்பிரதேசம் பகுதிகளில் சீனா சட்டவிரோதமாக இந்திய நிலப்பகுதிக்கு உரிமை கோருகிறது என்று ராஜ்யசபாவில் இன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டினார்.
அதேநேரம் இந்திய பாதுகாப்பு படைகள் சீனாவுக்கு தக்க பதிலடி கொடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய எல்லைப்பகுதிகளில் சீனா வால்ஆட்டுவது தொடர்பாக இரு தினங்களுக்கு முன்பு லோக்சபாவில் விளக்கம் அளித்திருந்தார் ராஜ்நாத் சிங். இதையடுத்து இன்று ராஜ்யசபாவில் அவர் அறிக்கை தாக்கல் செய்து பேசினார்.
இந்தியா சீனா ஒப்பந்தத்தை மதிக்கிறோம்... அமைதிக்கு ஒத்துழைப்போம்... ராஜ்நாத் பேச்சுக்கு சீனா பதில்!!
ஆக்கிரமிப்பு
அப்போது ராஜ்நாத் சிங் கூறியதாவது: லடாக் யூனியன் பிரதேசத்தில் சுமார் 38000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. இதுதவிர சீனா-பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தம் என்ற பெயரில் ஏற்படுத்தப்பட்ட 1963 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அந்த நாடு சட்டவிரோதமாக ஆக்கிரமித்த 5150 சதுர கிலோமீட்டர் பரப்பளவை சீனாவுக்கு தாரை வார்த்து கொடுத்துள்ளது.
அருணாச்சல பிரதேசம்
இதுதவிர அருணாச்சல பிரதேசத்தில் கிழக்கு செக்டார் பகுதியில் 90,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கான இந்திய நிலப்பகுதியை தங்கள் பகுதி எனக்கூறி வருகிறது சீனா. அதை நேரம் நமது எல்லையை விட்டுக் கொடுக்க கூடாது என்பதற்காக இந்தியப்படைகள் தீரத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் நரேந்திரமோடி லடாக் சென்றது இந்திய வீரர்களுக்கு மேலும் ஊக்கம் அளித்துள்ளது. சீனாவின் அத்துமீறலும் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுக்கும்.
சுமூக தீர்வு
எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள பிரச்சினை தொடர்பாக சீனாவுடன் இந்தியா நடத்தும் பேச்சுவார்த்தையில், சுமூக தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால், அமைதியை குலைக்க சீனா எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் இந்த பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை போடும் வாய்ப்பும் இருக்கிறது.
கட்டமைப்பு
எல்லையோர பகுதிகளில் உள்கட்டமைப்பை சீனா தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. எங்களது அரசு பதவிக்கு வந்தபிறகு எல்லைப்பகுதி கட்டமைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தது முன்பு இருந்ததைவிட இரண்டு மடங்கு அதிகமான உள்கட்டமைப்பு வசதிகளை எல்லையில் ஏற்படுத்தியுள்ளோம்.
ஒப்பந்தங்களுக்கு எதிரானது
சீன ராணுவம் எல்லைப் பகுதிகளில் அதிகமாகக் குவிக்கப்படுகிறது. 1993 மற்றும் 96 ஆம் ஆண்டுகளில் சீனா மற்றும் இந்தியா இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களுக்கு எதிராக சீனா இவ்வாறு படை குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு இந்திய தரப்பில் எவ்வாறு பதிலடி கொடுக்கிறது என்பது பற்றி முழுமையாக வெளிப்படையாக இப்போது தெரிவிக்க முடியாது. இந்த விஷயத்தின் முக்கியத்துவத்தை எதிர்க்கட்சிகள் புரிந்துகொண்டு அரசுக்கு ஒத்துழைப்பு தருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.