ஆயிரக்கணக்கில் வந்த சீன வீரர்கள்.. பலநாள் திட்டம்.. லடாக்கில் ஏதோ நடக்கிறது.. எக்ஸ்பர்ட் எச்சரிக்கை!
இந்திய எல்லையில் இருக்கும் லடாக் பகுதியில் சீனா திட்டமிட்டு தாக்குதல்களை நடத்தி வருகிறது, இதற்கு பின் பல நாள் பிளான் இருக்கலாம் என்று பாதுகாப்புத்துறை வல்லுநர் அஜய் சுக்லா தெரிவித்துள்ளார்.
லடாக்: இந்திய எல்லையில் இருக்கும் லடாக் பகுதியில் சீனா திட்டமிட்டு தாக்குதல்களை நடத்தி வருகிறது, இதற்கு பின் பல நாள் பிளான் இருக்கலாம் என்று பாதுகாப்புத்துறை வல்லுநர் அஜய் சுக்லா தெரிவித்துள்ளார்.
லடாக் எல்லையில் கல்வான் பகுதியில் நடந்த சண்டை இந்தியா - சீனா ஆகிய இரண்டு நாடுகளையும் உலுக்கி உள்ளது. அங்கு நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பு கூடி வருகிறது. நேற்று முதல் நாள் இரவு லடாக் எல்லையில் கல்வான் பகுதியில் நடந்த சண்டையில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
சீன தரப்பில் 43 பேர் பலியானதாக தகவல் வருகிறது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள். லடாக் மோதல் குறித்து பாதுகாப்புத்துறை வல்லுநர் அஜய் சுக்லா முக்கிய விவரங்களை வெளியிட்டு இருக்கிறார்.
என்ன பேட்டி
அஜய் சுக்லா இது தொடர்பாக அளித்துள்ள பேட்டியில், பொதுவாக லடாக் எல்லையில் குளிர் காலம் முடியும் போது சண்டை நடக்கும். அது சிறிய சிறிய மோதலாக இருக்கும். மிக சிறிய அளவில் கை கலப்பு மட்டுமே நடக்கும். இதனால் பெரிய அளவில் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது இல்லை. ஆனால் இந்த முறை அப்படி இல்லை. கல்வான் பகுதியில் எல்லாம் சீனா கடந்த 20 வருடங்களில் எப்போதும் அத்துமீறியது கிடையாது.
கல்வான் பகுதி
கல்வான் பகுதி அமைதியின் இடமாக இருந்து வந்தது. அந்த இடத்திற்கு சீனா உரிமை கோரியதே இல்லை. அங்கு சீனா டென்ட்கள் அமைத்தது எல்லாம் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. அதிர்ச்சி அளிக்க கூடியது. இதில் கவலை அளிக்க கூடிய விஷயம் என்னவென்றால் பொதுவாக எல்லையில் பிரச்சனை செய்ய நினைத்தால் சீனாவில் வீரர்கள் 10-50 பேர் மட்டுமே வருவார்கள்.
அதிக வீரர்கள்
டோக்லாம் சண்டையில் கூட சீனா 100 வீரர்களுக்கும் அதிகமாக எல்லையில் கொண்டு வரவில்லை. ஆனால் இப்போது 1000க்கும் அதிகமான வீரர்கள் எல்லைக்கு வந்தனர். இவர்கள் எல்லோரும் மிக தீவிரமாக தயார் படுத்தப்பட்டு முன்பே எல்லைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளனர். இது எல்லாம் திட்டமிட்டு நடந்து இருக்கிறது. அதேபோல் இந்த முறை தாக்குதல்கள் மோசமாக இருந்தது.
ஆயுதம் எப்படி
மிக மோசமான ஆயுதங்களை வைத்து சீனா தாக்கி உள்ளது. பாங்காங் திசோ பகுதியில் மே மாதத்திலேயே சண்டை நடந்தது. அப்போதே 77 இந்திய வீரர்கள் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டார்கள். மிக மோசமாக அவர்கள் காயம் அடைந்தனர். இந்த 77 வீரர்களும் மிக மோசமான காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கு முன் இப்படி எல்லாம் நடந்தது இல்லை.
என்ன நடக்கிறது
இது சீனா எல்லையில் லேசாக அத்துமீறும் விஷயம் கிடையாது. இந்த முறை சீனாவை சேர்ந்த வீரர்கள் இந்தியாவின் எல்லைக்குள் வந்துள்ளனர். அங்கே டென்ட் அமைத்து இருக்கிறீர்கள். அங்கேயே தங்கி இருக்கிறார்கள். இதெல்லாம் இந்திய வரலாற்றில் நடந்தது இல்லை. லடாக்கில் எதோ நடக்கிறது. அங்கு நிலைமை சரியில்லை.இதை உடனே கவனிக்க வேண்டும், என்று அஜய் சுக்லா தெரிவித்துள்ளார்.