குடியுரிமை சட்ட திருத்தம்.. மநீமவை தொடர்ந்து திமுகவும் வழக்கு.. உச்ச நீதிமன்ற படியேறியது!
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
டெல்லி: குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. மக்கள் நீதி மய்யம் நேற்று வழக்கு தொடுத்த நிலையில் இன்று திமுக வழக்கு தொடுத்துள்ளது.
குடியுரிமை சட்ட திருத்தம் நாடு முழுக்க எதிர்ப்பலைகளை சந்தித்து வருகிறது. இந்த சட்டம் காரணமாக இந்தியாவில் கிறிஸ்துவர், இந்து, சீக்கியர், ஜைனர், கிறிஸ்தவர், பார்சி மற்றும் புத்த மதத்தினர் மட்டுமே இதன் மூலம் குடியுரிமை பெற முடியும்.
அதேபோல் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளானவர்கள் மட்டுமே இங்கு குடியுரிமை பெற முடியும்.
என்ன சர்ச்சை
ஆனால் இந்த மசோதா இஸ்லாமியர்களுக்கு பொருந்தாது. இதனால் இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் பலர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதுதான் இந்த மசோதா எதிர்க்கப்பட காரணம்.
திமுக போராட்டம்
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக சார்பில் இன்று தமிழகம் முழுக்க போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடந்தது. இந்த சட்டம் மக்களுக்கு எதிரானது, இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று திமுக போராட்டம் செய்து வருகிறது.
என்ன வழக்கு
இந்த நிலையில்தான் இதற்கு எதிராக திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இந்திய அரசியலமைப்பின் சட்ட பிரிவு 14க்கு எதிராக இந்த சட்டம் இருக்கிறது என்று திமுக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சட்டத்திற்கு எதிராக வழக்கு சூடுபிடிக்க தொடங்கி உள்ளது
இதற்கு முன்பு
ஏற்கனவே இந்தியன் முஸ்லீம் லீக், காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். நேற்று இந்த சட்டத்திற்கு எதிராக மக்கள் நீதி மய்யம் வழக்கு தொடுத்தது. இந்த மசோதாவை ஆதரித்து அவையில் வாக்களித்த அசோம் கன பரிஷத் அமைப்பும் இதற்கு எதிராக வழக்கு தொடுக்க உள்ளது. இதன் மீதான விசாரணை விரைவில் நடக்கும்.