டீ சாப்பிட்டபடி சிரித்து பேசிய மோடி! உற்று கவனித்த ஸ்டாலின்! எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றிருந்தார்.
இதில் பிரதமர் மோடியுடன் கைகுலுக்கி அவர் பேசியிருந்த வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பகிரப்பட்டு வருகின்றன. கல்வி நிதி, பேரிடர் நிதி உள்ளிட்டவற்றில் தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு கவனம் பெற்றிருக்கிறது.

கடந்த 2014ம் ஆண்டு பாஜக மத்தியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு திட்டக்குழுவை கலைத்தது. அதற்கு பதிலாக நிதி ஆயோக் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நடந்த கூட்டத்தில் வழக்கம்போல் முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் ஸ்டாலின் இதில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் இந்த ஆண்டு 10வது நிதி ஆயோக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அதில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றிருக்கிறார். இக்கூட்டம் டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் மதியம் 1 மணி வரையிலும், அதன் பின்னர் மதியம் 2 மணிக்கு தொடங்கி 4 மணி வரையிலும் நடைபெற்றது. இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி பேசியிருக்கிறார். குறிப்பாக வேளாண் உற்பத்தியில் தன்னிறைவு, தேசிய கல்விக் கொள்கை மற்றும் உயர் கல்வியில் மாற்றத்தை அமல்படுத்துவது, நகர்ப்புற விரிவாக்கம் உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டிருக்கிறது.
சமீப காலமாக மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசின் சட்டப்போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக மசோதாக்களை நிறைவேற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கு வரலாற்று வெற்றி பெற்றிருந்தது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களும் நிறைவேற்றப்படுவதாகவும், இனி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களை ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

அதேபோல தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி விஷயத்திலும் சட்டப் போராட்டத்தை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்தப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறது.
இவ்வளவு பஞ்சாயத்துக்கு நடுவில்தான் பிரதமர் மோடியை ஸ்டாலின் சந்தித்திருக்கிறார். இந்த கூட்டத்தில் பொருளாதாரம் உட்பட ஒட்டுமொத்த வளர்ச்சி, மக்களின் வாழ்வாதாரம், எம்எஸ்எம்இ துறையின் வளர்ச்சி, ஒரே நாடு, ஒரே தேர்தல் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications