டெல்லியில் ஜி20 உச்சி மாநாட்டுக்கான ஆலோசனை கூட்டம்.. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
டெல்லி: டெல்லியில் ஜி 20 உச்சி மாநாட்டுக்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறும் நிலையில் அதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா உள்பட 20 நாடுகள் உறுப்பினர்களாக கொண்ட குழு ஜி 20 என அழைக்கப்படுகிறது. இந்த குழு உலக பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்டது.
ஆண்டுதோறும் ஒவ்வொரு நாடு தலைமை பண்பை ஏற்கும். கடந்த ஆண்டு இந்தோனேஷியா தலைமையில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெற்றது. அந்த வகையில் கடந்த 1ஆம் தேதி முதல் இந்தியாவுக்கு ஜி20 மாநாட்டை ஏற்று நடத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் ஜி20 மாநாடு ஆலோசனைக் கூட்டம்! டெல்லி செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!
தலைமையேற்கும் உரிமை
இதற்கான உரிமையை இந்தோனேஷியா இந்தியாவிடம் ஒப்படைத்தது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்த வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. ஜி 20 மாநாடு தொடர்பாக 32 துறைகளின் சார்பில் 200 ஆலோசனைக் கூட்டங்களை இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஜி 20 மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்துவதால் இந்தியா முழுவதும் உள்ள தொல்லியல் சின்னங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
மாமல்லபுரம்
மாமல்லபுரத்தில் உள்ள 5 ரதம், வெண்ணெய் உருண்டை பாறை, வேலூர் கோட்டை மதில் உள்ளிட்ட இடங்களில் லேசர் ஒளியுடன் கூடிய வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் இன்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு டெல்லி சென்றார்.
டெல்லி
அவ்வாறு டெல்லி சென்ற அவர் இன்று ஆலோசனை கூட்டம் முடிந்தவுடன் இரவே சென்னை திரும்புகிறார். அவர் பிரதமர் மோடியுடன் தனியே சந்தித்து பேச வாய்ப்பில்லை என்றுதான் சொல்லப்படுகிறது. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற இலக்குடன் இந்த ஜி 20 மாநாடு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அழைப்புக் கடிதம்
அதிலும் அவருக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்புக் கடிதத்தில் இடைக்கால பொதுச் செயலாளர், அதிமுக என குறிப்பிட்டுள்ளதால் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் டெல்லி சென்றுள்ளார். டெல்லி தலைமையின் ஆதரவு ஓபிஎஸ்ஸுக்கு மட்டும் என கருதப்பட்ட நிலையில் தற்போது எடப்பாடி தான் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் என்பதை அங்கீகரித்தது.
டெல்லி அங்கீகாரம்
அதிமுகவுக்கு ஒருவர் தலைவராக வர டெல்லி தலைமை விரும்பாது என்பதால், இரட்டை தலைமையையே டெல்லி தலைமை ஆதரிக்கும் என்றும் பத்திரிகையாளர்கள் கூறி வந்தனர். இதற்குத்தான் சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்தும் டெல்லி தலைமை அத்தனை முறை யோசித்ததாக சொல்லப்படுகிறது. ஒற்றைத் தலைமை கோஷத்தால் எடப்பாடி மீது டெல்லி தலைமைக்கு கோபம் என்றே சொல்லப்பட்டு வந்தது. அப்படியிருக்கும் போது இன்று அவருக்கான அங்கீகாரத்தை டெல்லி தலைமை கொடுத்துவிட்டதாகவே கருதப்படுகிறது. இது ஓபிஎஸ்ஸுக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.