இந்து கடவுள்கள், அமித் ஷாவை கிண்டல் செய்ததாக கைது.. காமெடியன் முனாவர் ஃபாரூக்கிக்கு இடைக்கால ஜாமீன்
டெல்லி: "இந்து கடவுள்களையும், அமித் ஷாவையும் அவமதித்ததாக" குற்றம் சாட்டப்பட்டு, ஜனவரி 1ம் தேதி முதல் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்டாண்ட்-அப் காமெடியன் முனாவர் ஃபாரூக்கிக்கு இன்று உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
முனாவர் ஃபாரூக்கிக்கு இதற்கு முன் மூன்று முறை ஜாமீன் மறுக்கப்பட்டது. அவருக்கு ஜனவரி 28 ம் தேதி ஜாமீன் வழங்க மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில்தான் உச்ச நீதிமன்றத்தை அணுகியிருந்தார்.
இந்தூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் முனாவர், இந்து தெய்வங்கள் குறித்தும், உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்தும், ஆட்சேபனைக்குரிய கமெண்ட் கூறி ஜோக் அடித்ததாக பாஜக எம்எல்ஏவின் மகன் ஏக்ல்வயா சிங் கவுர் அளித்த புகாரின்பேரில், ஜனவரி 1 ம் தேதி கைது செய்யப்பட்டார் முனாவர்.
"இதுவரை கிடைத்த சான்றுகள், வணிக ரீதியில் பொது இடத்தில் நடந்த ஸ்டாண்டப் காமெடியின்போது, மோசமான, இழிவான சொற்கள் பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது" என்று உயர் நீதிமன்றம் தெரிவித்து கடந்த மாதம் 28ம் தேதி ஜாமீன் மறுத்துவிட்டது.
அதேநேரம், முனாவருக்கு எதிரான எஃப்.ஐ.ஆர் "தெளிவற்றது" என்று சுட்டிக் காட்டியுள்ளார் உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.எஃப். நாரிமன்.
மத உணர்வுகளை புண்படுத்தியதாகக் கூறி உ.பி.யில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முனாவர் ஃபாரூக்கிக்கு எதிராக வழங்கப்பட்ட வாரண்டையும் உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது. முனாவர் ஃபாரூக்கி தாக்கல் செய்த ஜாமீன் மனு தொடர்பாக மத்திய பிரதேச காவல்துறையினருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இடைக்கால ஜாமீன்தான் முனாவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இடைக்கால ஜாமீன் என்பது, உரிய நீதிமன்றத்தில், குற்றம்சாட்டப்பட்டவர் வழக்கமான ஜாமீன் பெறுவதற்கும், அல்லது முன் ஜாமீன் பெறுவதற்கும் வழங்கப்படும் காலக்கெடுவாகும். எனவே உரிய நீதிமன்றத்தை முனாவர் அனுக வேண்டியிருக்கும்.