இன்று இரவுக்குள் மாநிலங்களுக்கு...ரூ. 20,000 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு...நிர்மலா சீதாராமன் உறுதி!!
டெல்லி: நடப்பாண்டுக்காக வசூலிக்கப்பட்ட கூடுதல் (செஸ்) வரியான ரூ. 20,000 கோடி இன்று இரவுக்குள் மாநிலங்களுக்கு வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
42-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்றது. காணொளி மூலம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், ''மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நடப்பாண்டுக்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகையான ரூ. 20,000 கோடி இன்று இரவுக்குள் மாநிலங்களுக்கு வழங்கப்படும்.
மேலும், இந்த வார இறுதிக்குள், ஏற்கனவே வசூலிக்கப்பட்டு மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியான ரூ. 24,000 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்படும்" என்றார்.

சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்தும் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை 5 ஆண்டுகளுக்கு ஈடு கட்டுவதாக மத்திய அரசு சார்பில் உறுதி அளித்து இருந்தது. அதன்படி, கடந்த 2019-20ஆம் ஆண்டில் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.1.65 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்கியது. இதுவே, 2018-19ஆம் நிதியாண்டில் ரூ.69,725 கோடியாகவும், 2017-18ஆம் நிதியாண்டில் ரூ.41,146 கோடியாகவும் இருந்தன. ஆனால், நடப்பு நிதியாண்டில் ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில் மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய இழப்பீடான ரூ. 1.51 லட்சம் கோடி இன்னும் நிலுவையில் உள்ளது.












Click it and Unblock the Notifications