பிரியங்காவின் அசர வைக்கும் வேகம்.. நாளை வெளியாகிறது உ.பி. காங். முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்?
டெல்லி: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி நாளை மாலை வெளியிடக் கூடும் என்கின்றன டெல்லி தகவல்கள்.
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைகளுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
உ.பி. முதல்வர் யோகி நிகழ்ச்சியில் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர்- 4 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்
உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக, சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு அடுத்த நிலையில்தான் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியமான வாக்குகள் அனைத்தும் சிதறிப் போய்விட்டன.
களத்தில் பிரியங்கா காந்தி
இதனால் உத்தரப்பிரதேச காங்கிரஸை வலுவானதாக கட்டமைக்கும் பொறுப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மேற்கொண்டு வருகிறார். உ.பி.யில் நடைபெறும் ஒவ்வொரு சிறு நிகழ்வையும் பிரியங்கா காந்தி விடுவதாக இல்லை. பிரியங்கா காந்தியின் இந்த அதிரடி ஆளும் பாஜகவுக்கு மட்டுமல்ல எதிர்க்கட்சிகளான சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கும் கூட நெருக்கடியாகவே இருக்கிறது.
பிரியங்கா காந்தியின் அதிரடி அறிவிப்புகள்
இந்நிலையில்தான் உ.பி. பெண் வாக்காளர்களை கவரும் வகையில் சட்டசபை தேர்தலில் பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு என்கிற அறிவிப்பை வெளியிட்டார் பிரியங்கா. அத்துடன் நவம்பர் 15-ந் தேதிக்குள் போட்டியிட விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்றார். அதேபோல் உ.பி.யில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பிளஸ் டூவில் பாஸாகும் மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன், பட்டப்படிப்பில் தேர்ச்சி பெறும் மாணவிகளுக்கு ஸ்கூட்டி இலவசமாக வழங்கப்படும் என்கிற இன்னொரு அறிவிப்பையும் வெளியிட்டார் பிரியங்கா.
விரைவாக வேட்பாளர் பட்டியல்
அத்துடன் நிற்காத பிரியங்கா அடுத்த கட்டமாக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்விலும் தீவிரமாக இருக்கிறார். அண்மையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில், கடந்த காலங்களைப் போல கடைசி நிமிடத்தில் வேட்பாளர்களை அறிவிக்கும் சூழ்நிலையை மாற்றித்தான் ஆக வேண்டும். பிற கட்சிகளைவிட முன்னதாகவே வேட்பாளர்களை அறிவித்தால் பிரசாரம் செய்ய எளிதாக இருக்கும். மேலும் நமக்கு சீட் கிடைக்குமோ கிடைக்காதோ என்கிற விரக்தியில் கட்சி தாவுவதும் குறையும் என சுட்டிக்காட்டியிருந்தார் பிரியங்கா.
நாளை முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்?
அவரது ஆலோசனையை ஏற்று டெல்லியில் நாளை மாலை உ.பி. வேட்பாளர்கள் குறித்த ஆலோசனை கூட்டத்தை கூட்டியிருக்கிறார் சோனியா காந்தி. இந்த கூட்டத்தில் முதல் கட்ட வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். நாளை மாலையே கூட இந்த முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டாலும் ஆச்சரியமில்லை என கூறப்படுகிறது. நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியலில் பிரியங்கா காந்தி பெயரும் கூட இடம்பெறக் கூடும் என்கின்ற டெல்லி காங். வட்டார தகவல்கள். பிரியங்கா காந்தி அடுத்தடுத்து காட்டி வரும் இந்த அசரவைக்கும் வேகம், உ.பி.யில் காங்கிரஸ் நிர்வாகிகளிடையே புதிய நம்பிக்கையை விதைக்கவும் தொடங்கி இருக்கிறது என்பதும் மிகை அல்ல.