மத்திய பாஜக அரசுக்கு காங்கிரஸ் பதிலடி! வெள்ளை அறிக்கைக்கு போட்டியாக கறுப்பு அறிக்கை வெளியீடு!
டெல்லி: முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் கால பொருளாதார நிலைமை தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட இருக்கும் வெள்ளை அறிக்கைக்கு பதிலடியாக நாட்டின் பொருளாதார சீரழிவு தொடர்பான கறுப்பு அறிக்கையை காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ளார்.
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தென்னிந்திய மாநிலங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய இடைக்கால பட்ஜெட்டில் தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என போராட்டங்கள் வெடித்துள்ளன. கர்நாடகா அரசு நேற்று டெல்லியில் போராட்டம் நடத்தியது. தமிழ்நாட்டுக்கு நீதி கோரி இன்று டெல்லியில் திமுக எம்பிக்கள் போராட்டம் நடத்துகின்றனர். கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று போராட்டம் நடைபெற உள்ளது.

வெள்ளை அறிக்கை: இந்த நிலையில் லோக்சபாவில் நேற்று பேசிய பாஜகவின் நிதி விவகாரங்களுக்கான நிலைக்குழுவின் தலைவர் ஜயந்த் சின்ஹா, 2014-ம் ஆண்டுக்கு முந்தைய கால இந்தியாவின் பொருளாதார நிலைமையையும் தற்போதைய பொருளாதார நிலைமையையும் ஒப்பிட்டு வெள்ளை அறிக்கை ஒன்றை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் மோசமான பொருளாதார நிலைமையை விவரிக்கும் வகையில் அந்த வெள்ளை அறிக்கை இருக்கும். நாட்டின் பொருளாதாரம் 5% மாக இருந்தது தற்போது 10% ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலைமையை எப்படி மத்திய அரசு எதிர்கொண்டது என்கிற விவரங்கள் வெள்ளை அறிக்கையில் இருக்கும் என கூறியிருந்தார். இந்த வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
#WATCH | Congress President Mallikarjun Kharge releases 'Black Paper' against the Modi government pic.twitter.com/cxKvD9xyNO
— ANI (@ANI) February 8, 2024
கறுப்பு அறிக்கை: மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு போட்டியாக 10 ஆண்டுகால பாஜக ஆட்சிக் கால பொருளாதார சீரழிவுகள் குறித்த கறுப்பு அறிக்கை ஒன்றை வெளியிடுவோம் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இந்த அறிக்கையை வெளியிடுவதாக அறிவித்தார். இதனடிப்படையில் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பாஜக அரசுக்கு எதிராக கறுப்பு அறிக்கையை வெளியிட்டார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கார்கே. பாஜக அரசு கவலைப்படாத, கவனம் செலுத்தாத வேலைவாய்ப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் நாங்கள் தொடர்ந்து குரல் எழுப்புகிறோம். பாஜக ஆட்சியில் இல்லாத கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திராமாநிலங்களுக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications