ராகுல் காந்திக்கு கணக்கு போடத் தெரியவில்லை.. குஷ்பு கிண்டல்
டெல்லி: லோக்சபாவில் ராகுல் காந்தியின் பேச்சுக்கு பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சிக்கு திமிர் பிடித்துள்ளது. யாராவது ராகுல் காந்திக்கு கணிதம் பற்றி சொல்லி கொடுக்க வேண்டும் என்று நடிகையும், பாஜகவை சேர்ந்தவருமான குஷ்பு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கு பிறகு கடந்த 24ம் தேதி நாடாளுமன்றம் தொடங்கியது. முதல் 2 நாட்கள் லோக்சபாவில் புதிய எம்பிக்கள் பதவியேற்றனர்.

அதன்பிறகு 27 ம் தேதி சபாநாயகர் தேர்தல் நடந்தது. இதில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஓம்பிர்லா வெற்றி பெற்றார். அதன்பிறகு லோக்சபா, ராஜ்யசபா கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பேசினார்.
இதையடுத்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் விவாதம் நடைபெற்றது. இதில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர், ராகுல் காந்தி இந்து கடவுளான சிவன் படத்தைக் காட்டி உரையாற்றினார். இதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மக்களவையில் சிவன் படத்தை காட்ட அனுமதி இல்லையா? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
மேலும், சிவன் கையில் இருக்கும் திரிசூலம் வன்முறைக்கானது இல்லை. அகிம்சைக்கானது என்றும் ராகுல் கூறினார். மேலும், ராகுல் காந்தி பாஜகவை விமர்சித்து கடுமையாக பேசினார். ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள், பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்துக்களை அவமதித்த ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிலையில் தான் லோக்சபா எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியை நடிகையும், பாஜகவை சேர்ந்தவருமான குஷ்பு விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛யாராவது ஒருவர் ராகுல் காந்திக்கு கணிதத்தை கொஞ்சம் கற்றுக்கொடுக்க வேண்டும். இவர் நாடாளுமன்ற தேர்தலில் 99 இடங்களில் வென்றதை Distinction என்று நினைக்கிறார். அவர்கள் பெற்ற 99 என்பது 100க்கு அல்ல 543க்கு. அதோடு அவர் ஒவ்வொருவரின் நம்பிக்கையையும் அவமானப்படுத்தி வருகிறார். ஒவ்வொரு பிரார்த்தனைகளின் மீதும் சந்தேகம் எழுப்புகிறார். ஒவ்வொரு நம்பிக்கையாளர்களையும் வன்முறையாளர் என்று குற்றம் சாட்டுகிறார்.
இது அவர் எவ்வளவு முதிர்ச்சியற்றவர் மற்றும் விரக்தியடைந்தவர் என்பதை காட்டுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு திமிர் பிடித்துள்ளது. அதோடு ராகுல் காந்தி, அமைதியான சமுதாயத்தில் ஒற்றுமையின்மை மற்றும் கொந்தளிப்பை உருவாக்குகிறார். இதுபோன்ற செயல்பாடுகளால் அவர்களின் உண்மையான முகம் விரைவில் வெளிப்படப்போகிறது'' என விமர்சனம் செய்துள்ளார்.
முன்னதாக ஜனாதிபதி திரெளபதி முர்முவின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது பிரதமர் மோடி லோக்சபாவில் பேசினார். அப்போது காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு அவர் பதிலடி கொடுத்தார். இந்த வேளையில், ‛‛ தொடர்ச்சியாக 3-வது முறையாகவும் காங்கிரஸ் கட்சி 100 இடங்களை கூட வெல்லவில்லை. காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்று விட்டு 100-க்கு 99 என்பது போல பேசுகிறது. ஆனால் உண்மையில் காங்கிரஸ் 543க்கு 99 இடங்களை தான் பெற்றுள்ளது'' என்று கிண்டல் செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications