“ஓம் சாந்தி”.. ராகுல் காந்தி பதவியை பறிச்சுட்டீங்க! மோடி - அதானி ஊழலை விட்டுட்டீங்க -காங்கிரஸ் சாடல்
டெல்லி: மோடி குறித்து அவதூறாக பேசியதற்காக சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இருக்கும் நிலையில், பிரதமர் மோடிக்கு தொடர்புடைய அதானி மெகா ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு பதிலாக ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து உள்ளதாக ஜெய்ராம் ரமேஷ் சாடியுள்ளார்.
கடந்த 2019 காங்கிரஸ் தேசிய தலைவராக இருந்த ராகுல் காந்தி அப்போது நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது கர்நாடகா மாநிலம் கோலாரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடியின் பெயருக்கு பின்னால் இருக்கும் "மோடி" என்ற துணை பெயரை குறிப்பிட்டு ராகுல் காந்தி விமர்சனம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

புர்னேஷ் மோடி வழக்கு
இதனை தொடர்ந்து குஜராத் முன்னாள் அமைச்சரும் பாஜக எம்.எல்.ஏவுமான புர்னேஷ் மோடி, ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மோடியின் சமூகம் மீது அவதூறாக பேசியதாக கூறி குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்தார். ராகுல் காந்தி மீதான இந்த வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக சூரத் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

சூரத் நீதிமன்றம்
இந்த நிலையில் சூரத் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா அமர்வில் மீண்டும் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக கேரள மாநிலம் வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி சூரத் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். வழக்கை விசாரித்த சூரத் மாவட்ட நீதிபதி வர்மா, ராகுல் காந்தியை மோடி குறித்து அவதூறாக பேசியதாக கூறி குற்றவாளி என தீர்ப்பளித்தார்.

2 ஆண்டுகள் சிறை
இதனை அடுத்து 2 ஆண்டுகள் அவருக்கு சிறை தண்டனை விதித்த நீதிபதி, உடனே 30 நாட்கள் ஜாமீனையும் வழங்கினார். இந்த அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அவர் அனுமதி வழங்கினார். இதனை தொடர்ந்து மேல்முறையீடு செய்வது தொடர்பாக ராகுல் காந்தி சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்தார்.

நாடு முழுவதும் போராட்டம்
சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை எதிர்த்து தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டணி கட்சியினரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட ராகுல் காந்தி, "அகிம்சை மற்றும் உண்மையை சார்ந்ததே என்னுடைய மதம். உண்மையே என் கடவுள். அதை அடைவதற்கான வழியே அகிம்சை." என்றார்.

ராகுல் காந்தி பதவி பறிப்பு
மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டாலும், அவரது எம்பி பதவி பறிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவே கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை மக்களவை கூடியது. அதில் ராகுல் காந்தியும் கலந்துகொண்டார். ஆனால், அவர் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதற்கு காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

எம்பி பதவி பறிப்பு
இந்த நிலையில் தற்போது மக்களவை செயலாளர் வெளியிட்டு இருக்கும் உத்தரவில், கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்படுவதாக அறிவித்து உள்ளார். ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டதற்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூட்டணி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்
இதுகுறித்து கருத்து தெரிவித்து உள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ், "நாங்கள் சட்டப்படியும், அரசியல் ரீதியாகவும் இதனை எதிர்த்து போரிடுவோம். எங்களை மிரட்ட முடியாது. அமைதியாகவும் இருக்க மாட்டோம். பிரதமர் மோடிக்கு தொடர்புடைய அதானி மெகா ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு பதிலாக ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து உள்ளார்கள். ஜனநாயகத்துக்கு ஓம் சாந்தி." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications