"பாஜகவுக்கு இது கறுப்பு நாள்.. அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள்.." பிரியங்கா சொன்ன வார்த்தை
டெல்லி: தொகுதி மறுசீரமைப்பு மசோதா தோல்வி அடைந்துள்ள நிலையில், இது ஜனநாயகத்திற்குக் கிடைத்த மகத்தான வெற்றி என்று பிரியங்கா காந்தி கூறியிருக்கிறார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு தாங்கள் ஆதரவு அளிப்பதாகவும் அதைத் தொகுதி மறுசீரமைப்பு மசோதா உடன் இணைத்ததையே தாங்கள் எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நேற்று கொண்டு வந்த தொகுதி மறுசீரமைப்பு மசோதோ போதிய ஆதரவைப் பெறாததால் தோல்வி அடைந்தது. இந்த மசோதாவால் தென் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் குறையும் என்பதே அச்சத்திற்குப் பிராதான காரணம். இதை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

பிரியங்கா காந்தி
இதற்கிடையே காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். "நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் நடந்த நிகழ்வு ஜனநாயகத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி; ஆளும் பாஜக கூட்டணிக்கு இது ஒரு 'கறுப்பு தினம்'" என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.
மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு மசோதா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை எப்படிப்பட்ட பலத்தைக் கொடுக்கும் என்பதை இந்த வாக்கெடுப்பு நிரூபித்துள்ளதாகப் பெருமிதம் தெரிவித்தார்.
அரசியல் சதி
இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "இந்த மசோதாவின் பின்னணியில் ஒரு மிகப் பெரிய அரசியல் சதி மறைந்திருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் தங்களுக்குத் தான் லாபம் என ஆளும் தரப்பு தப்புக் கணக்குப் போட்டது. மசோதா நிறைவேறினால் வெற்றி, நிறைவேறாவிட்டாலும் தாங்கள் தான் பெண்களின் காவலர்கள் என நாடகமாடி அனுதாபம் தேடலாம் என நினைத்தார்கள். எப்படியாவது ஒரு நிரந்தர அரசை அமைத்துவிட வேண்டும் என்பதற்காகவே அவசரம் அவசரமாக நாடாளுமன்றத்தைக் கூட்டி இந்த நாடகத்தை அரங்கேற்றினார்கள். ஆனால், அது அவ்வளவு எளிதல்ல என்பதை எதிர்க்கட்சிகள் உணர்த்திவிட்டன.
பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்ற பெயரில், மக்களவை எம்பிக்களின் எண்ணிக்கையை இவ்வளவு பெரிய அளவில் (543-ல் இருந்து 850 ஆக) தன்னிச்சையாக மாற்றுவதற்கு எதிர்க்கட்சிகள் எப்படி அனுமதிக்கும்? இது உண்மையிலேயே பெண்களுக்கான இட ஒதுக்கீடு பற்றியது அல்ல என்பது இப்போது தெளிவாகிவிட்டது. நாட்டில் உள்ள பெண்களை இனியும் முட்டாளாக்க முடியாது. உன்னாவ், ஹத்ராஸ் சம்பவங்களை நாம் பார்த்திருக்கிறோம். மணிப்பூரில் பெண்களுக்கு அநீதி நடந்தபோது இவர்கள் எங்கே போனார்கள்?
மத்திய அரசுக்கு அதிர்ச்சி
எதிர்க்கட்சிகள் ஒருபோதும் மகளிர் இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள் அல்ல. உங்களுக்கு உண்மையிலேயே பெண்களின் மீது அக்கறை இருந்தால், 2023ல் கொண்டு வரப்பட்ட பழைய மசோதாவை மீண்டும் கொண்டு வாருங்கள். தற்போதுள்ள நாடாளுமன்ற இடங்களிலேயே பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்குங்கள், நாங்கள் முழு மனதுடன் ஆதரவு தருகிறோம். இது அவர்களுக்கு (ஆளும் பாஜகவுக்கு ) ஒரு கறுப்பு நாள்.. முதல்முறையாக அவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கிடைத்துள்ளது.. அவர்களுக்கு இது தேவை தான்" என்று கடுமையாகச் சாடினார்.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுசீரமைப்பை மேற்கொண்டு, அதோடு மகளிர் இட ஒதுக்கீட்டையும் அமல்படுத்தும் 131-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வர மத்திய அரசு முயன்றது. இதில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் முழுமையாக ஆதரவு கொடுத்தது. இருப்பினும், அதைத் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுடன் இணைப்பதை எதிர்த்தன. இதனால் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த மறுத்துவிட்டன.
தோல்வி அடைந்தது ஏன்
இது அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா என்பதால் 66% ஆதரவு தேவைப்பட்டது. இருப்பினும், போதிய வாக்குகள் கிடைக்கவில்லை.. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 298 எம்பிக்களும், எதிராக 230 எம்பிக்களும் வாக்களித்தனர். மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் வெள்ளிக்கிழமை இந்த மசோதா தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. மசோதா தோல்வியடைந்ததை எதிர்க்கட்சிகள் தங்களின் வெற்றியாகக் கொண்டாடுகின்றன. தமிழக முதல்வர் ஸ்டாலின் இதற்காகப் பட்டாசு வெடித்துக் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.














Click it and Unblock the Notifications