லோக் சபாவில் பதாகைகளுடன் அமளி.. ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட்.. சபாநாயகர் உத்தரவு
டெல்லி: நாடாளுமன்றத்தில் அவையை நடத்தவிடாமல் அமளியில் ஈடுபட்டதால் காங்கிரஸ் லோக் சபா உறுப்பினர்கள் 4 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கியது. அதில் அக்னிபாத் திட்டம், ஜிஎஸ்டி வரிவிதிப்பு, விலைவாசி உயர்வு ஆகியவை குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படும் நிலை உருவாகியது. கடந்த வாரம் முழுவதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற அலுவல் பாதிக்கப்பட்டது.

அப்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் குணமடைந்து அவை திரும்பிய பின் எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று மத்திய அமைச்சர்கள் சார்பாக விளக்கமளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சுமூகமாக நடத்திச் செல்வது தொடர்பாக மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, பிரகலாத் ஜோஷி, அனுராக் சிங் தாக்குர், கிரண் ரிஜிஜு, பியூஷ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதேபோல் நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜுனா தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனையில் ஈடுபட்டன. இதனைத்தொடர்ந்து இன்று மீண்டும் நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கியது. கூட்டம்தொடங்கிய சில நிமிடங்களிலேயே முதலே பதாகைகளுடன் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, அவை செயல்பட விடாமல் அவைத் தலைவரின் இருக்கைக்கு முன்பு நின்று பதாகைகள் ஏந்தி அமளியில் ஈடுபட்டதற்காக காங்கிரஸ் லோக் சபா உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, டி.என்.பிரதாபன், ரம்யா ஹரிதாஸ் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்படுவதாக ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார்.
லோக் சபா சபாநாயகர் ஓம் பிர்லா இடைநீக்கம் செய்த நான்கு எம்பி-க்களும் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை மழைக்காலக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications