உ.பி. 9 தொகுதி இடைத்தேர்தல்- ராகுல் காந்தியின் செம்ம மூவ்.. அகிலேஷ் ஓஹோ ஹேப்பி..என்ன நடந்தது?
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் 9 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எடுத்திருக்கும் அதிரடி முடிவு காங்கிரஸ் தலைவர்களை மட்டுமல்ல.. எதிர்க்கட்சிகளையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்தியா கூட்டணி உடைந்துவிடும் என நினைத்து மகிழ்ந்தவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் ராகுல் காந்தி.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் 10 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. இதில் 9 தொகுதிகளுக்கு நவம்பர் 13-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு சட்டசபை தொகுதி இடைத் தேர்தல் குறித்த வழக்கு நடைபெற்று வருகிறது.

உ.பி. இடைத்தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. லோக்சபா தேர்தலில் இந்தியா கூட்டணி மொத்தம் 43 தொகுதிகளைக் கைப்பற்றிய நம்பிக்கையில் அதே பாணியில் இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் அடிப்படையில் இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது.
இந்தப் பேச்சுவார்த்தையில் சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சமாக 2 தொகுதிகளை மட்டுமே கொடுக்க முன்வந்தது. ஆனால் காங்கிரஸ் தரப்பிலோ 5 தொகுதிகள் கேட்கப்பட்டது. இதனை தொடர்ந்து சமாஜ்வாதி கட்சி நிராகரித்தும் வந்தது. இந்த இழுபறிக்கு இடையே சமாஜ்வாதி கட்சி 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் கூட அறிவித்தது. இதனால் இந்தியா கூட்டணி உடைந்து போய்விடும் என பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கனவு கண்டன.
இந்நிலையில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாகவும் கூறப்பட்டது. உத்தரப்பிரதேச இடைத்தேர்தலில் காங்கிரஸ் 2 தொகுதிகளில் போட்டியிட்டாலும் வெற்றி உறுதிதான் என்று சொல்ல முடியாத நிலை; இதனால் அடம்பிடித்து 2 தொகுதிகளை பெற்று தோல்வியை தழுவுவதைவிட 9 தொகுதிகளையுமே சமாஜ்வாதி கட்சியிடம் கொடுத்துவிட்டு தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிவிடலாம் என்பது ராகுல் காந்தியின் திட்டமாம். இப்படிச் செய்வதன் மூலம் காங்கிரஸ் கவுரவம் பாதிக்கப்படாது; அதே போல இந்தியா கூட்டணியும் உடையாமல் இருக்கும்.. ராகுல் காந்தியின் இந்த அதிரடி வியூகம்தான் சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவை மட்டுமல்ல.. அனைத்து அரசியல் கட்சிகளையும் வாயடைக்க வைத்துள்ளதாம்.
இது தொடர்பாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தொகுதிகள் எத்தனை என்பதைவிட வெற்றிதான் முக்கியம்; இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் 9 தொகுதிகளிலும் சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள் சின்னத்திலேயே போட்டியிடுவர்; சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸும் ஒருங்கிணைந்தே தேர்தலை எதிர்கொள்கின்றன. சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸை உள்ளடக்கிய இந்தியா கூட்டணியின் இந்த வியூகம் புதிய வரலாற்றையே எழுதும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் அகிலேஷ் யாதவ்.
தற்போது இந்த முடிவை காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்துவிட்டது. உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தொகுதிகள் இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை; காங்கிரஸ் கட்சியினர் வேறு எந்த கட்சியின் சின்னத்திலும் போட்டியிடவும் மாட்டார்கள். இந்தியா கூட்டணியின் வேட்பாளர்களுக்காக காங்கிரஸ் கட்சி தீவிர பிரசாரம் மேற்கொள்ளும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications