அடிவாங்கியும் திருந்தாத காங்கிரஸ்... மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் பார்வையாளர்கள் அறிவிப்பால் குமுறல்!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், ஹரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியை சந்தித்ததற்கான காரணங்களில் ஒன்றாக கட்சி நியமித்த மேலிடப் பார்வையாளர்களின் செயலற்றதன்மையும்தான் என விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர், ஹரியானா தோல்விகளுக்கு காரணமானவர்களாக கூறப்படும் அதே பார்வையாளர்களை மீண்டும் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் பணிகளுக்கும் காங்கிரஸ் மேலிடம் நியமித்திருப்பது ஏன்? என அக்கட்சியின் சீனியர் தலைவர்கள் கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் ஹரியானா மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை. ஜம்மு காஷ்மீரில் ஜம்மு பிராந்தியத்தில் இந்துக்கள் பெரும்பான்மையினராக உள்ள தொகுதிகள் அனைத்திலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் படுதோல்வியை சந்தித்தனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில்தான் சில இடங்களில் காங்கிரஸால் வெல்ல முடிந்தது.

ஹரியானாவில் 10 ஆண்டுகால பாஜக ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலையை அறுவடை செய்ய முடியாமல் படுதோல்வியை சந்தித்துவிட்டது காங்கிரஸ். ஹரியானாவில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு மிதமிஞ்சிய தன்னம்பிக்கை, உட்கட்சி மோதல்கள் மட்டும் காரணம் அல்ல; காங்கிரஸ் மேலிடம் நியமித்த பொறுப்பாளர்கள் செயல்படாமல் சொகுசு விடுதிகளில் முடங்கிக் கிடந்ததும்தான் எனவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல்களுக்கான மேலிடப் பார்வையாளர்களை காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவித்துள்ளார். இந்த பட்டியலில் யார் யார் ஜம்மு காஷ்மீர், ஹரியானா தேர்தலுக்கு காரணமானவர்கள் என விமர்சிக்கப்படுகின்றனரோ அவர்கள் அத்தனை பேருமே இடம் பெற்றுள்ளனர். உதாரணமாக ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல், பஞ்சாப் முன்னாள் முதல்வர் சன்னி, ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் என நீள்கிறது இந்த பட்டியல். ஜம்மு காஷ்மீரிலும் ஹரியானாவிலும் தாங்கள் தங்கிய விடுதிகளை விட்டு செய்தியாளர்கள் சந்திப்புக்கு மட்டுமே தலைகாட்டிய இதே 'தலைகள்'தான் தற்போது மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர், ஹரியானா தோல்விகளுக்காக இவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு புதிய பார்வையாளர்களை களமிறக்கியிருந்தால் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினருக்கு உற்சாகமும் கிடைத்திருக்கும்; பெயரளவுக்கு மேலிடப் பார்வையாளர்களை அனுப்பி வைத்து என்ன பயன் என்பதுதான் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எழுந்துள்ள குமுறல்.












Click it and Unblock the Notifications