போலி படிப்புகளில் தொடர்ந்து சிக்கும் கல்வித்துறையை கவனிக்கும் மத்திய அமைச்சர்கள்!
டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைகளில் கல்வி துறையை கவனிக்கும் மனித வளமேம்பாட்டு அமைச்சர்கள் போலி படிப்புகள் விவகாரத்தில் சிக்குவது தொடர் கதையாகி வருகிறது.
2014-19-ல் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்தவர் ஸ்மிருதி இரானி. இவர் பதவி ஏற்ற நாள் முதல் ஆட்சிக் காலம் முடியும் வரை என்னதான் படிப்பு படித்தார் என்பது புரியாத புதிராகவே இருந்தது.

டெல்லி பல்கலைக் கழகத்தில் பட்டம், அமெரிக்காவின் யேல் பல்கலைக் கழகத்தில் பட்டம் என்றெல்லாம் ஸ்மிருதி இரானி அடித்துவிட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அப்படி எதுவுமே அவர் படிக்கவில்லை. அத்தனையும் போலியான படிப்புகள்; பள்ளி படிப்பைக் கூட ஸ்மிருதி இரானி தாண்டவில்லை என்பதும் அம்பலமானது.
தற்போது மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் ரமேஷ் பொக்ரியால். இவர் உத்தரகாண்ட் மாநில முதல்வராக இருந்தவர். தமது பெயருக்கு முன்னால் 'டாக்டர்' என்கிற பட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்த டாக்டர் பட்டம்தான் இப்போது சர்ச்சையாக வெடித்திருக்கிறது. கொழும்பில் உள்ள திறந்த நிலை பல்கலைக் கழகம்தான் பொக்ரியாலுக்கு டாக்டர் பட்டம் ஒன்றை வழங்கியதாம். ஆனால் இலங்கையில் உள்ள இந்திய தூதரகமோ, கொழும்பு திறந்த நிலை பல்கலைக் கழகம் என்பது பதிவு செய்யப்படாத அதாவது போலி பல்கலைக் கழகம் என 2017-ம் ஆண்டே கூறிவிட்டது.
இருப்பினும் தம்முடைய வேட்புமனு மற்றும் அரசு பதிவுகளிலும் டாக்டர் என்றுதான் குறிப்பிட்டு வருகிறார் பொக்ரியால். அதேநேரத்தில் தாம் முதல்வராக இருந்த போது அம்மாநிலத்தில் பதிவு பெற்ற பல்கலைக் கழகங்கள் தமக்கு டாக்டர் பட்டம் வழங்கியது என விளக்கம் அளித்து வருக்கிறார் பொக்ரியால்.
இப்படி கல்வி துறையை கவனிக்கும் மத்திய மனித வளமேம்பாட்டுத் துறை அமைச்சர்கள் தொடர்ந்து போலி படிப்பு விவகாரத்தில் சிக்குவதால்தான் நெட்டிசன்கள், ஒருவேளை போலி படிப்பு, பட்டம் வைத்திருந்தால்தான் இந்த துறை அமைச்சாரவதற்கான தகுதியா? என கிண்டலடித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications