ஒடிசா ரயில் விபத்து கொடூரத்திலும் "மத சாயம்" பூச முயற்சி! உடனே இறங்கிய ஒடிசா போலீஸ்! அதிரடி வார்னிங்
டெல்லி: ஒடிசாவில் 3 ரயில்கள் விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விபத்து குறித்தும் சிலர் கீழ்த்தரமான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஒடிசா போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொல்கத்தாவில் இருந்து சென்னைக்குத் தினசரி இயக்கப்படும் ரயில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ். தினசரி மாலை 3.20 மணிக்கு இந்த ரயில் சென்னைக்கு இயக்கப்படுகிறது. இது கிழக்கு கடற்கரையை ஒட்டி பயணித்து ஒடிசா, ஆந்திரா வழியாக மறுநாள் சென்னை வந்தடையும்
கடந்த வெள்ளிக்கிழமையும் இந்த ரயில் இப்படி தான் வழக்கம் போலக் கொல்கத்தாவில் இருந்து கிளம்பியது. அப்போது ஒடிசாவில் பாலசோர் என்ற இடத்திற்கு வந்த போது இது விபத்தில் சிக்கியது.

ரயில் விபத்து: ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரயில் இந்த விபத்தில் சிக்கியுள்ளது. எப்போதும் போல இந்த ரயிலில் கூட்டம் நிரம்பியே இருந்தது. குறிப்பாக இதில் தமிழ்நாட்டிற்கு வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் அதிகப்படியாக இருந்துள்ளனர். விபத்து நடந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்ட நிலையில், மீட்புப் பணிகள் நிறைவடைந்து இப்போது சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
இந்த விபத்தில் சுமார் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த விபத்தில் தப்பிப் பிழைத்தவர்கள் அங்கே கண்ட காட்சி விவரிக்கும் போது அது கொடூரமாக இருந்ததாகவே குறிப்பிடுகிறார்கள்.
கீழ்த்தரமான செயல்: தேசமே உயிரிழந்தவர்களுக்கு ஆறுதலாகவும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகிறது. இருப்பினும், சில இந்த கடினமான நேரத்திலும் சில கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அதாவது இந்த ரயிலின் ஓட்டுநர் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் என்பது போல கீழ்த்தரமான கருத்துகளைப் பதிவிட்டு தேவையற்ற வெறுப்பு வாதத்தைப் பரப்பி வருகின்றனர்.
இதற்கிடையே இதுபோன்ற கருத்துகளைப் பதிவிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒடிசா காவல்துறை இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. சில சமூக வலைத்தள கணக்குகள் பாலசோர் விபத்து குறித்து தவறான தகவல்களைப் பரப்புவதாகவும், அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
எச்சரிக்கை: அவர்கள் மேலும், "வதந்திகளைப் பரப்பி மத நல்லிணக்கத்தைக் கெடுக்க முயல்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.. தெரிவித்துள்ளது, விபத்துக்கான காரணம் குறித்து மாநில அரசின் ரயில்வே காவல்துறை (ஜிஆர்பி) விசாரணை மேற்கொண்டு வருகிறது" என்று பதிவிட்டுள்ளனர்.
இப்போது வரை இந்த உயிரிழப்பில் சுமார் 288 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். எலக்ட்ரானிக் இன்டர்லாக் சிஸ்டத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் இந்த விபத்து நடந்ததாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
என்ன காரணம்: சிக்னல் பிரச்சினையும் இதற்குக் காரணம் என்றும் இது தொடர்பாகக் கூடுதல் விசாரணைக்குப் பின்னரே என்ன காரணம் என்பது கண்டறியப்படும் என்றும் ரயில்வே வாரியத்தின் ஜெய வர்மா சின்ஹா தெரிவித்தார். மேலும், ரயில் விபத்தைத் தடுக்க பயன்படும் கவாச்க்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சின்ஹா கூறினார்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வேயின் தணிக்கை அறிக்கையையும் இப்போது பேசுபொருள் ஆகியுள்ளது. அந்த தணிக்கையில் ரயில் பாதுகாப்பில் கடுமையான குறைபாடுகளை இருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. இதை ரயில்வே அமைச்சகம் கவனமாகப் பரிசீலனை செய்து சரி செய்திருந்தால் விபத்தைத் தவிர்த்திருக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications