கணவர் ராபர்ட் வதேராவுக்கு கொரோனா: தமிழக தேர்தல் பிரசார பயணத்தை ரத்து செய்த பிரியங்கா காந்தி
கணவர் ராபர்ட் வதேராவுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தமிழகம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்துள்ளார்.
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்த காரணத்தால் தன்னை வீட்டிலேயே சுயமாக தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார். கணவர் ராபர்ட் வதேராவுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து பிரியங்கா காந்தி தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் பிரச்சார பயணத்தை ரத்து செய்துள்ளார்.
கொரோனா பரவலுக்கு இடையே 5 மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தல் பிரசாரம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அசாம், மேற்குவங்கத்தில் 2 கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ள நிலையில் 6ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் கேரளாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. தேசிய தலைவர்களும், கூட்டணி கட்சி தலைவர்களும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பேசி வருகின்றனர்.
நாடு முழுவதும் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தினசரியும் 2500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தேர்தலில் போட்டியிடும் 10 வேட்பாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரியங்கா காந்தி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக நாளை தமிழகம் வர இருந்தார். ஸ்ரீபெரும்புதூர், கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார் பிரியங்கா. இந்தநிலையில் அவரது கணவர் ராபர்ட் வதேராவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். தேர்தல் பிரசார பயணங்களையும் ரத்து செய்து விட்டார் பிரியங்கா.
हाल में कोरोना संक्रमण के संपर्क में आने के चलते मुझे अपना असम दौरा रद्द करना पड़ रहा है। मेरी कल की रिपोर्ट नेगेटिव आई है मगर डॉक्टरों की सलाह पर मैं अगले कुछ दिनों तक आइसोलेशन में रहूँगी। इस असुविधा के लिए मैं आप सभी से क्षमाप्रार्थी हूँ। मैं कांग्रेस विजय की प्रार्थना करती हूँ pic.twitter.com/B1PlDyR8rc
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) April 2, 2021
பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் பிரியங்கா காந்திக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்றே வந்துள்ளது. இருப்பினும் மருத்துவர்கள் அவரை வீட்டுத்தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர் என்பதால் பிரியங்கா தன்னை வீட்டிலேயே சுயமாக தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
பிரியங்கா காந்தி இன்று அசாமிலும், நாளை தமிழகத்திலும், நாளை மறுநாள் கேரளாவிலும் தேர்தல் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைபடுத்திக்கொண்டிருப்பதால் பிரசார பயணங்களை ரத்து செய்துள்ளார். தமிழகம், கேரளாவில் ஏப்ரல் 4ஆம் தேதி இரவு 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வருவதால் பிரியங்கா காந்தி தனது பிரசார பயணத்தை ரத்து செய்ய வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார். பிரியங்காவின் வருகை ரத்தாகியுள்ளதால் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.