டெல்லி ஷாஹின் பாக் பகுதியில் சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டம் - மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு
டெல்லி: மத்திய அரசின் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக மக்கள் ஊரடங்கு நாளிலும் போராட்டம் நடைபெறும் டெல்லி ஷாஹின் பாக் பகுதியில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியதால் பதற்றம் ஏற்பட்டது.
கொரோனா தொற்று நோய் தாக்குதலைத் தவிர்க்க நாடு முழுவதும் இன்று பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. பொதுவாக நாடு முழுவதும் அனைத்து நகரங்கள், கிராமங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

அனைத்து பொதுப் போக்குவரத்துமே ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பொதுவாக முடங்கி உள்ளது.
இந்த நிலையிலும் மத்திய அரசின் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக டெல்லி ஷாஹின் பாக் பகுதியில் தொடர் போராட்டம் நடைபெறுகிறது. பிரதமர் மோடியின் மக்கள் ஊரடங்கு கோரிக்கையை நிராகரிப்போம் என ஏற்கனவே சி.ஏ.ஏ .எதிர்ப்பாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே தங்களது போராட்டம் நடைபெறும் பகுதியில் மர்ம நபர்கள் இன்று பெட்ரோல் குண்டுகளை வீசியதாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் டெல்லி ஷாஹின் பாக்கில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
5 பேருக்கு மட்டும் அனுமதி
டெல்லி ஷாஹின் பாக் பகுதியில் இன்று 5 பேருக்கு மட்டும்தான் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே டெல்லியில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் ஒன்று கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications