56 நாளில் 9 லட்சம் கொரோனா நோயாளிகள்... குணமடைவதில் ராக்கெட் வேகம்... ஆறுதலான விஷயம்!!
டெல்லி: நாட்டில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று வரை நாட்டில் கொரோனா தொற்றுக்கு 9 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 24,309 பேர் உயிரிழந்து உள்ளனர். தமிழகம் உள்பட குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கையும் 1.8 சதவீதம் அதிகரித்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று குறித்து செய்தி வெளியிட்டு இருக்கும் மத்திய சுகாதாரத்துறை, ''இந்தியாவில் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மேகாலயா, நாகலாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பால் குணமடைந்து வருபவர்களை விட, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

ஆனால், 20 மாநிலங்களில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களை விட குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை தேசிய சராசரியைவிட 63 சதவீதம் அதிகமாக இருக்கிறது. மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய சுகாதாரத்துறை பணியாற்றுவதன் மூலம் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அந்தமான் நிகோபார் , ஆந்திரப்பிரதேசம், அசாம், பீகார், சண்டிகர், சத்தீஸ்கர், தாமன் அண்டு டியு, டெல்லி, கோவா, குஜராத், அரியானா, ஜம்மு காஷ்மீர், இமாசலப்பிரதேசம், ஜார்கண்ட், லடாக், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மிசோரம், ஒடிசா, புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, திரிபுரா, உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. தமிழகத்தில் இதுவரை இந்த நோயில் இருந்து 92,567 பேர் குணமடைந்து வந்துள்ளனர். இன்னும் 48,199 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மகாராஷ்டிராவில் 1,44,507 பேர் குணமடைந்து வந்துள்ளனர். இன்னும் 1,05,935 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்றைய கணக்கின்படி, நாட்டில் 9,06,752 பேருக்கு தொற்று இருந்தது. ஆனால், இவற்றில் இதுவரை குணமடைந்து வந்தவர்களின் எண்ணிக்கை 5,71,459 ஆக இருக்கிறது. இன்னும் 3,11,565 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து ஆறாவது நாளாக எண்ணிக்கை 26,000க்கும் மேல் அதிகரித்துள்ளது. ஒரு லட்சத்தை தொடுவதற்கு இந்தியாவுக்கு 110 நாட்கள் தேவைப்பட்டது. ஆனால், வெறும் 56 நாட்களில் 9 லட்சத்தை கடந்துள்ளது.
இதுவரை 63.02 கொரோனா நோயாளிகள் தொற்றில் இருந்து குணமடைந்து வந்துள்ளனர். 10 மாநிலங்களில் இருந்து 86 சதவீத நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இவர்களில் மகாராஷ்டிரா, தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 50 சதவீத கொரோனா நோயாளிகள் பதிவாகி உள்ளனர். இந்த இரண்டு மாநிலங்களில் 1,54,134 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கர்நாடகா, டெல்லி, ஆந்திரப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், தெலங்கானா, மேற்குவங்கம், குஜராத், அசாம் ஆகிய மாநிலங்களில் இருந்து 36 சதவீத கொரோனா நோயாளிகள் பதிவாகி உள்ளனர்'' என்று தெரிவித்துள்ளது.
22 மாநிலங்கள் பத்து லட்சம் மக்களில் 140 பேருக்கு தினமும் பரிசோதனை மேற்கொள்கின்றன. உலகிலேயே அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்து தொற்றில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ''இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 29,429 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,36,181 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 582 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கையும் 24,309 ஆக அதிகரித்துள்ளது'' என்று தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் உயிரிழப்பு 10,695 ஆகவும், தமிழ்நாட்டில் உயிரிழப்பு 2,099ஆகவும் அதிகரித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக உயிரிழப்பு டெல்லியில் 3,466 ஆகவும், கர்நாடகாவில் 842 ஆகவும், குஜராத்தில் 2069 ஆகவும் உள்ளது.












Click it and Unblock the Notifications