கோவேக்சின் தடுப்பூசி தன்னார்வலர் உயிரிழந்தது எப்படி? பாரத் பயோடெக் விளக்கம்
டெல்லி: தங்கள் கோவேக்சின் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் 3ம் கட்ட மருத்துவ பரிசோதனையின்போது தன்னார்வலர் இறந்துவிட்டதாக வெளியான தகவல் பொய்யானது என்று பாரத் பயோ டெக் தெரிவித்துள்ளது. தன்னார்வலர் விஷம் காரணமாக இறந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹைதராபாத்தைச்ச சேர்ந்த பாரத்பயோடெக் மருந்து நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) மற்றும் தேசிய வைராலஜி நிறுவனம் (என்.ஐ.வி) உடன் இணைந்து கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.
இந்த தடுப்பூசியின் 3வது கட்ட டிரையல் நடந்து வரும் நிலையில், கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் அமைப்பு அனுமதி வழங்கியது.
இந்தியாவில் ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி - மத்திய அரசு
தடுப்பூசி பணிகள்
ஜனவரி 16ம் தேதி முதல், கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவருகிறது மத்திய அரசு. இந்த நிலையில், தடுப்பூசி போட்டுக் கொண்ட தன்னார்வலர்களில் ஒருவர் மரணமடைந்த தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவர் தடுப்பூசி பக்க விளைவால் பலியாகவில்லை என பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது.
தன்னார்வலர் மரணம்
இதுகுறித்து ஒரு அறிக்கையில் பாரத் பயோடெக் கூறியுள்ளதாவது: டிசம்பர் 21, 2020 அன்று ஒரு தன்னார்வலர் மரணமடைந்தார். இறந்தவரின் மகனால் இந்த மரணம் பற்றிய தகவல், மக்கள் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
7 நாட்கள் கண்காணிப்பு
மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையில் அந்த நபர் சேர்ந்தபோது, அவரது உடல்நிலை பரிசோதித்து பார்க்கப்பட்டு அனைத்து, விதிமுறைகளையும் அந்த தன்னார்வலர் பூர்த்தி செய்திருந்தார், மேலும் அனைத்து வகைகளிலும், தடுப்பூசி போட்ட 7 நாட்கள் தொடர்ந்து அவர் கண்காணிக்கப்பட்டார்.
தடுப்பூசி போட்ட 9 நாட்களுக்குப் பிறகுதான் தன்னார்வலர் காலமானார். இது இறப்பு ஆய்வுகளுடன் தொடர்பில்லாதது என்பதை உறுதி செய்கிறது.
விசாரணை
போபால் காந்தி மருத்துவக் கல்லூரி வெளியிட்ட பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, விஷம் காரணமாக இருதய செயலிழப்பு காரணமாக அந்த நபர் உயிரிழந்துள்ளார். போலீசார் விசாரித்து வருகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.