கொரோனாவால் இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 114; மகா- 748; தமிழ்நாடு- 621 பேர் பாதிப்பு
டெல்லி: கொரோனாவால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 114 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் 748 பேரும் தமிழகத்தில் 621 பேரும் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Recommended Video
கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. நாட்டிலேயே மிக அதிகமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 45 பேர் பலியாகி உள்ளனர். இதற்கு அடுத்ததாக குஜராத் மாநிலத்தில்தான் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு மொத்தம் 748 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்ததாக தமிழகத்தில் 621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை 5 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த மாநிலங்களைத் தொடர்ந்து டெல்லியில் 523 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. டெல்லியில் கொரோனாவுக்கு 7 பேர் பலியாகி இருக்கின்றனர்.
கேரளாவில் தாக்கம் குறைந்தது
கொரோனா தொடக்கத்தில் அதிகமாக தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த கேரளாவில் மொத்தம் 327 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாநிலத்தில் கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திராவில் 266 பேரும் தெலுங்கானாவில் 321 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இருமாநிலங்களிலும் மொத்தம் 10 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கின்றனர்.
குஜராத்தில் 12 பேர் பலி
12 பேரை பலி கொண்ட குஜராத்தில் 144 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. ஹரியானாவில் 90 பேருக்கும் ஜம்மு காஷ்மீரில் 109 பேருக்கும் இந்த நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கர்நாடகாவில் 151 பேருக்கு நோய் தொற்று இருக்கிறது. இம்மாநிலத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர்.
ம.பி.யில் 9 பேர் உயிரிழப்பு
மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனாவுக்கு 9 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கு மொத்தம் 165 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மணிப்பூரில் 2 பேரும் மிசோரம், அருணாசலப்பிரதேசத்தில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். ராஜஸ்தானில் 288 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டும் 3 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
திரிபுராவில் முதலாவது நபருக்கு கொரோனா
திரிபுராவில் கொரோனாவுக்கு முதலாவது நபர் பாதிக்கப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் 3 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கின்றனர். மொத்தம் 305 பேர் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மேற்கு வங்கத்தில் 91 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 3 பேர் பலியாகி உள்ளனர். நாடு முழுவதும் மொத்தம் 4421 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
4778 பேருக்கு பாதிப்பு?
அதேநேரத்தில் INDIA COVID-19 TRACKER புள்ளி விவரங்களின் படி இந்தியாவில் மொத்தம் 4778 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 133 என்கிறது. மகாராஷ்டிராவில் இதுவரை 52 பேர் பலியாகி உள்ளனர் என்கிறது இந்த INDIA COVID-19 TRACKER.