டெல்லியில் தலைவிரித்தாடும் கொரோனா மரணங்கள்.. பேரவலங்களின் மையமாகிப் போன மருத்துவமனைகள்!
டெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லியில் கொரோனா மரணங்கள் தலைவிரித்தாடுகின்றன.. டெல்லியின் ஒவ்வொரு மருத்துவமனையும் கொரோனா பேரவலத்தின் சாட்சியமாக நின்று மனசாட்சியை கொன்று குவிக்கிறது.
Recommended Video
உலக நாடுகளிலேயே இந்தியாவில்தான் கொரோனா பாதிப்பு மிகவேகமாக அதிகரித்து வருகிறது. ஒருநாள் கொரோனா பாதிப்புகளில் இந்தியாதான் முதல் இடத்திலும் இருக்கிறது.
இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள குருதேஜ் பகதூர் மருத்துவமனையின் எமர்ஜென்சி அறைகள் சிகிச்சை பெறும் நோயாளிகளாலும் மரணத்தை நெருங்கிய நோயாளிகள், மரணத்தை தழுவிய நோயாளிகளாலும் நிறைந்து கிடக்கிறது. கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் சொல்ல முடியாத துயரத்தை சுமந்தவர்களாக இருக்கின்றனர்.

பார்க்கிங்கிலும் சிகிச்சை
குருதேஜ் பகதூர் மருத்துவமனையின் பார்க்கிங் பகுதியில் கூட ஆக்சிஜன் குழாய்கள் பொருத்தப்பட்ட நிலையில் நோயாளிகள் சிகிச்சை பெறுவதைப் பார்க்க முடிகிறது. அப்படி சிகிச்சை பெறுபவர்கள் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். இங்கே நோயாளிகள் திடீரென மரணிப்பது அடிக்கடி நிகழ்கின்ற ஒன்றாகி விட்டது.

கிழக்கு டெல்லி மயானம்
கிழக்கு டெல்லி பகுதியில் கொத்து கொத்தா கொரோனா நோயாளிகளின் சடலங்கள் எரிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா 2-வது அலைக்கு உறவுகளை பறிகொடுத்த குடும்பத்தினர் சடலங்களை எரியூட்டும் டிரோன் படக் காட்சிகள் நெஞ்சை உறைய வைப்பதாகவே இருக்கின்றன. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 சகோதரர்கள் ஆக்சிஜனுக்காக போராடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவருக்கு ஆக்சிஜன் பொருத்தப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த வினாடியிலேயே அவர் மரணத்தை தழுவியதையும் பார்க்க முடிந்தது. 6 மணிநேரம் ஆக்சிஜனுக்காக போராடி காத்திருந்தனராம்.

கொஞ்சம் ஆக்சிஜன்
அந்த மருத்துவமனையில் காத்திருந்த 23 வயது துஷார் மெளரியா சொன்னது இப்படித்தான்.. இந்த அரசாங்கத்துக்கு நான் சொல்ல விரும்புவது.. கொஞ்சமாவது ஆக்சிஜனை கொடுங்கள் என்பதுதான்.. பொதுமக்களுக்கு படுக்கைகள் தேவை, மருந்துகள் தேவை.. ஊசிகள் தேவை என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் எங்கள் வேண்டுகோள் என்கிறார். டெல்லியின் அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா நோயாளிகளால் நிறைந்து காணப்படுகிறது.

மருத்துவ பேரழிவு
குருதேஜ் பகதூர் மருத்துவமனை முன்பாக, தாயை பறிகொடுத்த மகள் ஒருவர், இது யூஸ்லெஸ் மருத்துவமனை என விரக்தியில் பேசுவதை கேட்க முடிந்தது. இந்திய தேசமானது இப்போது மிக மோசமான இக்கட்டமான மருத்துவ பதற்றம் அல்லது பதாயத்தை எதிர்கொண்டிருக்கிறது. மருத்துவமனைகளின் பேரவலங்களும் இதில் அடங்கக் கூடியதுதான். ஆக்சிஜன் சிலிண்டர்களுக்காக மருத்துவர்கள் கூட சமூக வலைதளங்களில் கெஞ்சி பதிவிடுவதை பார்க்கவும் முடிகிறது.

மக்கள் கொடுக்கும் விலை
கொரோனா 2-வது அலையை மத்திய அரசு கையாண்டு கொண்டிருக்கிற விதமானது கடும் விமர்சனத்துக்குள்ளாக்கி இருக்கிறது. முதலாவது லாக்டவுனை அமல்படுத்தி அதை தளர்த்திய பின்னர் கொரோனா பரவலே முடிந்து போய்விட்டதாக அதிகார மையங்கள் நினைத்துக் கொண்டதுதான் பேரவலம். கடந்த சில வாரங்களாக எத்தனை அரசியல் பேரணிகள், ஹரித்வார் கும்பமேளா என பல லட்சம் பேரை ஒரே இடத்தில் ஒன்று கூட செய்கிற அலட்சியம் இந்த அதிகார மையங்களிடத்தில் இருந்தது. மத்திய பாரதிய ஜனதா அரசின் அலட்சியமான தவறான முடிவுகளுக்கு இந்த தேசத்தின் மக்கள் மிகப் பெரிய விலையை கொடுத்து வருவதுதான் வேதனைக்குரியதாக உள்ளது.












Click it and Unblock the Notifications