பிஎம் கேர்ஸ் நிவாரணத்திற்கு வந்த நிதியை தணிக்கை செய்ய வேண்டும்.. ராகுல் காந்தி அதிரடி கோரிக்கை
டெல்லி: கொரோனா நிவாரணத்துக்காக பிஎம் கேர்ஸ்க்கு வந்த நிதியை முறையாகத் தணிக்கை செய்யவேண்டும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு பணிகளுக்காக 15 ஆயிரம் கோடியை மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. மொத்தமாக நாடு முழுக்க கொரோனா நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக 1.7 லட்சம் கோடி நிவாரணத் தொகுப்பை அறிவித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதேபோல் கூடுதலாக நிதி திரட்டுவதற்காக மத்திய அரசு பிஎம் கேர்ஸ் என்ற (Prime Minister's Citizen Assistance and Relief in Emergency Situations Fund - PM CARES) நிதி கணக்கை துவங்கி உள்ளது. கொரோனாவிற்கு எதிராக போராட இந்த கணக்கு மூலம் மத்திய அரசு நிதி திரட்டி வருகிறது.
ஆனால் இந்த கணக்கு சிஏஜியின் தணிக்கைக்கு கீழ் வரவில்லை. சிஏஜி தணிக்கை செய்யாமல் இந்த பணம் அரசால் யாருக்கும் கணக்கு காட்டப்படாமல் பயன்படுத்தப்படும். இதற்கு பல பிரபலங்கள் பணம் அளித்து உள்ளனர். பல்வேறு கோடீஸ்வரர்கள், விளையாட்டு வீரர்கள் பணம் அளித்துள்ளனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இது தொடர்பாக டிவிட் செய்துள்ளார். அதில், பிரதமர் கேர்ஸ் நிவாரண நிதிக்கு மிக அதிக அளவில் நிவாரண தொகை வந்து குவிந்துள்ளது. இந்த நிவாரண கணக்கிற்கு தனியார் நிறுவனங்களும், பொதுத் துறை நிறுவனங்கள், ரயில்வே துறை ஆகிய நிறுவனங்கள் நிதி வழங்கி உள்ளது.
ஆனால் இதை அரசு தணிக்கை செய்யாது என்று கூறுகிறார்கள். இந்த தொகையை தணிக்கை செய்வது மிக முக்கியம். எவ்வளவு பணம் வந்தது, அதை எப்படி செலவு செய்தோம் என்று மக்களுக்கு அரசு தெரியப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications