கதறும் இங்கிலாந்து.. மேலும் 46,800 பேருக்கு கொரோனா.. 1 லட்சம் குழந்தைகள் பாதிப்பு..!
இங்கிலாந்தில் மீண்டும் உயர தொடங்கி உள்ளது கொரோனாவைரஸ் பாதிப்பு
டெல்லி: இங்கிலாந்தில் தொற்று மீண்டும் பரவ ஆரம்பித்துவிட்டது.. அதிலும் குழந்தைகளை இந்த கொரோனா வைரஸ் அதிக அளவில் தாக்கி உள்ளதாக, ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது.. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51.55 லட்சத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.
இதுவரை 5,155,202 பேரை காவு கொண்டுவிட்டது இந்த கொரோனாவைரஸ்.. உலகம் முழுவதும் இன்னமும் 256,935,241 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இதில் 79,226 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்று பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் தொடர்ந்து உள்ளன... எனினும், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது... அதற்கேற்றார்போல் தடுப்பூசி பணிகளும் துரிதமாகி உள்ளது.. கொரோனாவுக்கு எதிரான தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மும்முரமாகி கொண்டிருக்கிறது.
ஆனால், எத்தனையோ நாடுகளில் தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டும்கூட, மீண்டும் பரவ ஆரம்பித்துவிட்டது.. அந்த வகையில் சீனாவில் துவங்கி உள்ளது.. இப்போது இங்கிலாந்திலும் பாதிப்பு வந்துவிட்டது.. நேற்று முன்தினம் 46,807 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி உள்ளது.. இதன் மூலம் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 97 லட்சத்து 21 ஆயிரத்து 916 ஆக உயர்ந்திருக்கிறது.. இதுதான் அந்நாட்டு மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா வைரஸ் தாக்கி மட்டும் 199 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள்... மொத்தத்தில் இங்கிலாந்தை பொறுத்தவரை மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 1,43,559 ஆக உயர்ந்துள்ளது.. அதிலும், இங்கிலாந்தில் 5 முதல் 9 வயது வரையிலான குழந்தைகளிடம் அதிக அளவில் தொற்று காணப்படுவதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது. அதாவது, 1 லட்சம் குழந்தைகளில் 700 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களாம்.. ஏற்கனவே குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு இருக்கும்போது, நாடு முழுவதும் தொடர்ந்து தொற்று கவ்வி உள்ளது, மேலும் பாதிப்பை அங்கு ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.