கோவிஷீல்டு கால இடைவெளி குறைப்பு.. இனி 8 வாரங்களில் 2ஆவது டோஸ் போடலாம்.. காரணம் என்ன தெரியுமா
டெல்லி: சீனா, ஹாங்காங் நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், கோவிஷீல்டு கால இடைவெளியை மத்திய அரசு குறைத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆல்பா, டெல்டா, பீட்டா என கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருவதால் அதை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை.
கொரோனா வேக்சின் பணிகள் தொடங்கிய பின்னர் தான் நாட்டில் வைரஸ் பாதிப்பும் உயிரிழப்புகளும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் வேக்சின் பணிகளை மேலும் வேகமாக மேற்கொள்ள மத்திய மாநில அரசுகள் தேவையான நடவடிக்கை எடுத்து வருகின்றன.

கோவிஷீல்டு
இந்தியாவில் பல்வேறு கொரோனா வேக்சினுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள போதிலும், பெரும்பாலும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளே செலுத்தப்பட்டு வருகிறது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி 4 முதல் 6 வாரக் கால இடைவெளியில் இரண்டு டோஸ்களாக போடப்படுகிறது. அதேநேரம் கோவிஷீல்டு தடுப்பூசியின் 2 டோஸ் கால இடைவெளி அவ்வப்போது மாற்றப்பட்டே வந்தது. மருத்துவ வல்லுநர்களின் பரிந்துரைப்படியே இந்த கால இடைவெளி மாற்றப்பட்டு வந்ததாக மத்திய அரசு விளக்கம் அளித்திருந்தது.

கால இடைவெளி
அதன்படி தற்போது கோவிஷீல்டு தடுப்பூசி 12 முதல் 16 வாரக் கால இடைவெளியில் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த இரு டோஸ் கோவாக்சின் இடையேயான கால இடைவெளியை 8 முதல் 16 வாரங்களாகக் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இனி கோவிஷீல்டு முதல் டோஸ் எடுத்துக் கொண்டவர் 8 வாரங்களில் 2ஆவது டோஸ் வேக்சினை எடுத்துக் கொள்ளலாம். சர்வதேச ஆய்வு முடிவுகளின் அடிப்படையிலேயே வல்லுநர் குழு வேக்சின் கால இடைவெளியை மாற்றப் பரிந்துரைத்துள்ளது. அதன் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

என்ன காரணம்
இது குறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறுகையில், "சர்வதேச அளவில் கோவிஷீல்டு 2 டோஸ் இடையேயான கால இடைவெளி தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகிறது. அவற்றை ஆய்வு செய்ததில் 12 முதல் 16 வார கால இடைவெளியில் கோவிஷீல்டு அளிக்கப்படும் போதும், வேக்சின் கால இடைவெளி 8 வாரங்களில் அளிக்கப்பட்டும் போதும் ஆன்டிபாடிகளில் பெரியளவில் மாற்றம் இல்லை. எனவே, இனி 8ஆவது வாரத்தில் இருந்தே வேக்சின் 2ஆவது டோஸை ஒருவர் எடுத்துக் கொள்ளலாம்" என்றார்.

ஏன் முக்கியம்
கொரோனா வைரஸ் உலகெங்கும் கடந்த சில மாதங்களாகவே குறைந்து வந்தது. இருப்பினும், சீனா, ஹாங்காங் உள்ளிட்ட சில நாடுகளில் இப்போது வைரஸ் பாதிப்பு மெல்ல மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. வேக்சின் எடுத்துக் கொள்பவர்கள் கொரோனாவால் உயிரிழக்கும் ஆபத்து மிகக் குறைவு என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியும் நிலையில், அனைத்து நாடுகளுமே வேக்சின் பணிகளைத் தீவிரம் காட்டி வருகிறது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications