புல்வாமா தாக்குதல்.. 40 வீரர்கள் பலி.. உளவுத் துறையின் தோல்வியே காரணம்.. சிஆர்பிஎஃப் அறிக்கை!
டெல்லி: காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு உளவுத் துறையின் தோல்வியே காரணம் என சிஆர்பிஎஃப் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
காஷ்மீரில் புல்வாமா என்ற இடத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்று கொண்டிருந்த 78 கான்வாய் வாகனத்தின் மீது கார் முழுவதும் வெடிப்பொருட்களுடன் தற்கொலை படையைச் சேர்ந்த ஒருவர் மோதினார்.
இந்த தாக்குதலில் வெடிப்பொருள்கள் வெடித்து சிதறியதில் 40 சிஆர்பிஎஃப் படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது.

30 ஆண்டுகள்
நாட்டையே உலுக்கிய இந்த தாக்குதலுக்கு உளவுத்துறையின் தோல்வியே காரணம் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் உளவுத் துறை காரணம் இல்லை என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இது குறித்து கடந்த மாதம் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷான் ரெட்டி பேசுகையில் எல்லை தாண்டிய பயங்கரவாத அமைப்புகளால் அளிக்கப்படும் நிதி மூலம் 30 ஆண்டுகளாக காஷ்மீர் பாதிக்கப்பட்டது.

அறிக்கை
உளவு துறை அமைப்புகள் உள்பட அனைத்து புலனாய்வு அமைப்புகளும் தக்க நேரத்தில் தகவல்களை பகிர்ந்து கொள்கின்றன என தெரிவித்தார். ஆனால் தற்போது அதற்கு எதிர்மறையான ஒரு அறிக்கையை சிஆர்பிஎஃப் வெளியிட்டுள்ளது.

எச்சரிக்கை
15 பக்கங்களை கொண்ட அந்த அறிக்கையில் புல்வாமா தீவிரவாத தாக்குதலில் 40 வீரர்கள் பலியாக உளவுத்துறையின் எச்சரிக்கை குறைப்பாடே காரணமாக இருந்தது. வழக்கமாக மட்டுமே எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் கார் மூலம் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்படும் என்பது போல் எந்த வித எச்சரிக்கையையும் உளவுத் துறை கொடுக்கவில்லை.

கான்வாய்
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள எந்தவொரு உளவுத் துறை அமைப்புகளும் தாக்குதல் தொடர்பான எச்சரிக்கைகளை கொடுக்கவில்லை. இதனாலேயே எங்களால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. கான்வாய் வாகனங்களை அடையாளம் கண்டு கொள்வது அத்தனை சுலபம் இல்லை.

சிஆர்பிஎஃப் வீரர்கள்
ஆனால் கான்வாய் வாகனங்களுக்கு மத்தியில் பொதுமக்களின் வாகனங்களையும் இயக்குவதற்கு அனுமதித்தும் இந்த தாக்குதலுக்கு காரணம். மேலும் வழக்கத்தை காட்டிலும் நீண்ட கான்வாயில் வீரர்கள் சென்றதால் குறி வைக்க எளிதாகிவிட்டது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கை சிஆர்பிஎஃப் படையின் இயக்குநர் ஜெனரலிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications