தூக்கிலிடுவதற்கு பதில் வலி இல்லாத மரண தண்டனை குறித்து ஆராய வல்லுநர் குழு: மத்திய அரசு
டெல்லி: நாட்டில் தூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்றும் முறைக்கு பதிலாக வலி இல்லாத மரண தண்டனையை அமல்படுத்துவது தொடர்பாக ஆராய வல்லுநர் குழு அமைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்கப்படுகின்றன. தூக்கிலிட்டுதான் இத்தகைய மரண தண்டனைகள் நாட்டில் நிறைவேற்றப்படுகின்றன. இத்தகைய மரண தண்டனை நடைமுறைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், கடந்த மாதம் இந்த வழக்கை விசாரித்தது. அப்போது, இந்தியாவின் மரண தண்டனை முறை மிக கொடூரமானதாக சட்ட ஆணையம் சுட்டிக்காட்டி இருக்கிறது என்றார் மூத்த வழக்கறிஞர் ரிஷி மல்ஹோத்ரா. இது தொடர்பான வாதங்களையும் அவர் முன்வைத்திருந்தார்.
இவ்வழக்கில் கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி சந்திரசூட், நமது நாட்டில் நிறைவேற்றப்படுகிற மரண தண்டனை முறையானது கொடூரமானதுதானா? என்பது குறித்து மத்திய அரசு விவாதிக்க முன்வர வேண்டும் என்றார். அத்துடன் மரண தண்டனையை தூக்கிலிடுதல் போல் அல்லாமல் குறைவான வலியுடன் நிறைவேற்ற மாற்று வழிகள் இருக்கின்றனவா? என்பது குறித்தும் ஆராயலாம் எனவும் மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவுறுத்தி இருந்தார். இதனை ஆய்வு செய்து அறிக்கையாகத் தாக்கல் செய்ய அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அத்துடன் இது தொடர்பாக ஒரு குழுவை அமைத்தும் மத்திய அரசு ஆலோசனை நடத்தலாம் எனவும் உச்சநீதிமன்றம் வழிகாட்டி இருந்தது.
இந்நிலையில் இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு பதிலாக மாற்று வழி குறித்து ஆராய வல்லுநர் குழுவை அமைப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருகிறது மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications