அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 75வது ஆண்டு! நாடாளுமன்றத்தில் இன்று விவாதம்
டெல்லி: இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, இன்றும் நாளையும் நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு சட்டத்தின் மீது விவாதம் நடைபெறுகிறது. விவாதத்தின் இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்கிறார்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா இன்று உருவெடுத்திருப்பதற்கு முக்கிய காரணம், நாட்டின் அரசியலமைப்பு சட்டம்தான். இந்த சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் ஆகியுள்ளன. இந்நிலையில், அரசியலமைப்பு மீதான விவாதத்தை மக்களவையில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கிறார். இன்றும் நாளையும் விவாதம் நடைபெறுகிறது. மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த விவாதத்தை தொடங்கி வைக்கிறார்.

ஏற்கெனவே அதானி விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆனால் இந்த கோரிக்கை இரண்டு அவைகளிலும் ஏற்கப்படாததால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருகிறது. மத்திய அரசு இந்த விவாதத்தை நடத்த தயாராக இல்லை. எதிர்க்கட்சிகளும் இதனை விட்டுக்கொடுக்க ரெடியாக இல்லை. எனவே இரு அவைகளின் செயல்பாடுகளும் முன்னெப்போதும் இல்லாத வகையில் தடைபட்டிருக்கிறது.
இந்த சூழலில்தான் அரசியலமைப்பு குறித்த விவாதம் தொடங்குகிறது. எதிர்க்கட்சிகள் சார்பில் இந்த விவாதத்தை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மக்களவையில் விவாதம் முடிந்த பிறகு, மாநிலங்களவையில் வரும் டிச.16ம் அமித்ஷாவால் விவாதம் தொடங்கி வைக்கப்படும். எதிர்க்கட்சிகள் தரப்பில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விவாதங்களை தொடங்குவார்.
இரு அவையிலும் விவாதங்கள் நிறைவுற்ற பின்னர் பிரதமர் நரேந்திர மோடி இதன் மீது பதில் அளித்து பேசுவார். கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரங்களில் ராகுல் காந்தி அரசியலமைப்பை காப்பாற்ற வேண்டும் என்கிற முழக்கத்துடன் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். இந்த பரப்புரை எதிர்பார்த்த அளவுக்கு கை கொடுத்திருந்தது. எனவே அனைத்து அரசியல் இயக்கங்களிலும் அரசியலமைப்பு புத்தகத்தின் பிரதியை ராகுல் காந்தி கையில் வைத்து சிறப்புரை ஆற்றி வருகிறார்.
இந்நிலையில் இந்த விவாதத்தில் எதிர்க்கட்சிகள் தீவிரமான குற்றச்சாட்டுகளை முன்வைக்க வாய்ப்பு இருக்கிறது. அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை பாதுகாக்க கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கம் எழுப்பலாம்.












Click it and Unblock the Notifications