கோர்ட்டுக்கு இதுதான் வேலையா?தேசிய விலங்காக பசுவை அறிவிக்கனும் மனுவை விசாரிக்க மறுத்த சுப்ரீம்கோர்ட்!
டெல்லி: தேசிய விலங்காக பசுவை அறிவிக்க கோரி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் இதுதான் நீதிமன்றத்தின் வேலையா? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கவுல், அபய் எஸ் ஓஹா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் காட்டமாக கேள்வி எழுப்பியது.
நமது தேசத்தின் தேசிய விலங்காக புலி இருந்து வருகிறது. ஆனால் புலிக்கு பதில் பசுவை தேசிய விலங்கு என அறிவிக்க வேண்டும் என்பது வலதுசாரிகளின் நீண்டகால கோரிக்கை.

2014-ம் ஆண்டு வலதுசாரி கட்சியான பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தது முதல் பசு, இந்தியாவின் தேசிய விலங்கு என அறிவிக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு ஒருதரப்பில் இருந்து வருகிறது. பல்வேறு இந்துத்துவா அமைப்புகள் இந்த கோரிக்கையை தொடர்ந்து தீவிரமாக வலியுறுத்தம் குரல் கொடுத்தன.
கடந்த ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் நீதிமன்றத்தில் விசாரணை நடத்திய அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் யாதவ், பசுவை இந்தியாவின் தேசிய விலங்கு என அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தார். மேலும் பசு பாதுகாப்பு இந்து சமூகத்தின் அடிப்படை உரிமை. இதை நடைமுறையில் கொண்டு வர வேண்டும். தேசத்தின் கலாசாரம், நம்பிக்கைகள் பலவீனமானால் நாடும் பலவீனமாகும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் Govansh Sewa Sadan என்ற தன்னார்வ அமைப்பு சார்பாக உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநலன் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கவுல், அபய் எஸ் ஓஹா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், தேசிய விலங்காக பசுவை அறிவிப்பதுதான் எங்கள் வேலையா? இதில் என்ன அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன? என கடுமையாக கேள்வி எழுப்பி கண்டித்து மனுவை விசாரிக்க மறுத்தனர்.












Click it and Unblock the Notifications