தீவிரமாகும் விவசாயிகள் போராட்டம்.. டெல்லியின் முக்கிய எல்லைப்புற சாலைகள் மூடல்
டெல்லி: விவசாய சட்டங்களை திரும்பப் பெறக் கோரி போராடி வரும் விவசாயிகளால் டெல்லியின் சிங்கு மற்றும் திக்ரி எல்லை சாலைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.
மத்திய அரசு கொண்டுவந்த 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 150 நாட்களை எட்டப்போகிறது. டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தை டெல்லியுடன் இணைக்கும் காசிப்பூர் எல்லை ஓரளவு திறக்கப்பட்டு, டெல்லியில் இருந்து காஜியாபாத் வரையிலான வாகன போக்குவரத்து நடந்து வருகிறது.
இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: காஜியாபாத் நோக்கி காசிப்பூர் என்.எச் -24 மேல் பக்கம் போக்குவரத்து இயக்கத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. நொய்டாவிற்கும் டெல்லிக்கும் இடையிலான சில்லா எல்லை இருபுறமும் திறந்திருக்கும். என்றார்.
காஜியாபாத்தில் இருந்து டெல்லிக்குள் நுழையும் வாகனங்கள் ஆனந்த் விஹார், சூர் நகர், அப்சரா, போப்ரா, லோனி, கோண்ட்லி, சில்லா, புதிய அசோக் நகர், டி.என்.டி, மற்றும் கலிண்டி குஞ்ச் வழியாக செல்லும் மாற்று வழித்தடங்களுக்கு திருப்பி விடப்படுவதாக டெல்லி போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
எனவே இந்த வழிகளில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. காசிப்பூர் எல்லையைத் தவிர, சிங்கு, மற்றும் திக்ரி எல்லைகளும் மூடப்பட்டுள்ளன.