டெல்லிக்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில்.. நடுவானில் திடீரென தீ விபத்து! பதறிய பயணிகள்
டெல்லி: பாட்னாவில் இருந்து புறப்பட்ட விமானத்தின் இன்ஜினில் திடீரென தீப்பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காரணமாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்றாக விமான போக்குவரத்துத் துறை இருந்து வருகிறது.
கொரோனாவில் இருந்து மெல்ல மீண்டு வரும் நிலையில், எரிபொருள் விலையும் ஏர்லைன் நிறுவனங்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் லாபத்தில் இயங்குவதே ஏர்லைன் நிறுவனங்களுக்குச் சவாலாக உள்ளது.
ஸ்பைஸ்ஜெட் விமானம்
இப்படிப்பட்ட சூழலில் விமான நிறுவனங்கள் குறித்து வரும் சிறு புகாரும் கூட ஏர்லைன் நிறுவனங்களுக்குக் கெட்ட பெயரைப் பெற்றுத் தந்துவிடும். அப்படியொரு சம்பவம் தான் இப்போது ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு நடந்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் பாட்னாவில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்டுள்ளது.
தீ விபத்து
SG723 என்ற இந்த விமானம் 185 பயணிகளுடன் பாட்னாவில் இருந்து கிளம்பி உள்ளது. இருப்பினும், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் இன்ஜினில் தீப்பிடித்துள்ளது. இதையடுத்து விமானம் உடனடியாக பத்திரமாகத் தரை இறக்கப்பட்டது. இந்த விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன காரணம்
அதேநேரம் தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது குறித்து விரிவான தொழில்நுட்ப விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில் தீ விபத்திற்கான காரணமாக தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பயணிகள் அனைவரும் தற்காலிகமாகத் தங்க ஏற்பாடுகள் விமான நிலையத்திலேயே செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்கள்
விமானத்தில் என்ஜின் கோளாறு ஏற்பட்டதால், டெல்லி செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானம் பாட்னா விமான நிலையத்திற்குத் திரும்பியதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விமான என்ஜினில் தீப்பற்றியதை அப்பகுதியில் வசிக்கும் மக்களே முதலில் பார்த்துள்ளனர். இதையடுத்து அவர்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
விசாரணை
அதன் பின்னர் பைலட்டிற்கு தீ பற்றியது குறித்துத் தெரிவிக்கப்பட்டு, விமானம் உடனடியாக பாட்னா ஏர்போர்ட்டிற்கு திரும்பியதாக பாட்னா மாவட்ட மாஜிஸ்திரேட் (டிஎம்) சந்திரசேகர் சிங் தெரிவித்தார். மேலும், 185 பயணிகளும் பத்திரமாக உள்ளதாகவும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் காரணத்தை பொறியியல் குழு ஆய்வு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.