செம புலன் விசாரணை.. 300 சிசிடிவி.. ஒரு மெட்ரோ கார்டு! ரியல் எஸ்டேட் அதிபர் கொலை கேஸ் முடிந்தது!
டெல்லி: டெல்லியில் 77 வயது நிரம்பிய பில்டர் ராம் கிசோர் அகர்வால் கொலை வழக்கில் 300 சிசிடிவி கேமரா, டெல்லி மெட்ரோ ரயிலுக்கான ஸ்மார்ட் கார்டு ஆகியவற்றின் உதவியுடன் போலீசார் கொலையாளியை கைது செய்தனர்.
டெல்லி வடக்கு சிவில் லைனில் வசித்து வந்தவர் ராம் கிஷோர் அகர்வால் (வயது 77). பில்டர். இவர் தனது இரண்டு மாடி வீட்டில் கீழ்தளத்தில் வசித்து வந்தார். இவரது மனைவி கொரோனாவால் கடந்த ஆண்டு இறந்தார்.
ராம் கிஷோர் அகர்வாலின் மகனும் அவரது குடும்பத்தினரும் முதல் தளத்தில் வசித்து வருகின்றனர். வீட்டில் நான்கு பேர் வேலை செய்து வருகின்றனர்.

பணத்துக்காக கழுத்து அறுத்துக்கொலை
இந்நிலையில் தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் ராம் கிஷோர் அகர்வால் பிணமாக கிடந்தார். அவரின் கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது. உடலில் சில இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. மேலும் வீட்டில் இருந்து பணம் திருட்டு போனதும் தெரியவந்தது. இதனால் யாரோ மர்மநபர்கள் அவரை கொலை செய்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இந்த படுகொலை சம்பவம் டெல்லியில் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.

3 தனிப்படைகள்
துணை போலீஸ் கமிஷனர் (வடக்கு) சாகர் சிங் கல்சி உத்தரவில் கொலையாளிகளை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது 2 பேர் கொலை செய்துவிட்டு வீட்டை விட்டு ஓடிய தகவல் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். மேலும் அந்த நபர்கள் ஓடியதாக கூறப்படும் இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன.

சிறுவன் கைது
அதன்படி தற்போது கொலை வழக்கில் பீகாரை சேர்ந்த 18 வயது நிரம்பாத சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அகர்வால் வீட்டில் தூய்மை பணியாளராக பணியாற்றினார். அதன்பிறகு பணியை விட்டு நின்றார். இந்த வேளையில் அவரது பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டு இன்னொருவருடன் சேர்ந்து கொலையை அரங்கேற்றியது தெரியவந்தது. இவர் ராஜீவ் சவுக் மெட்ரோ ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இவர் மீது வேறு சில வழக்குகளும் உள்ளது.

சிக்கியது எப்படி?
கொலை நடந்த பிறகு போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான 2 பேர் சனிக்கிழமை இரவில் ராம் கிஷோர் அகர்வால் வீட்டு அருகே பைக்கில் வந்து நிற்கின்றனர். அதன்பிறகு அவர்கள் சிவில் லைன்ஸ் மெட்ரோ நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்தனர். பிறகு இருவரும் ஒன்றாக இணைந்து கொலையை செய்துவிட்டு பைக்கில் தப்பினர். வழக்கு தொடர்பாக 300க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மற்றும் மெட்ரோ ஸ்மார்ட் கார்டு மூலம் கண்காணிப்பு நடத்தி கைது நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

2வது நபர் கைதா?
இந்த வழக்கில் ஒருவர் கைதான நிலையில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின்போது சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் கொலை வழக்கு தொடர்பாக போலீசார் இன்னொருவரையும் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் போலீசார் இதை உறுதி செய்யவில்லை.












Click it and Unblock the Notifications