இதாங்க நட்பு.. “எமோஷன்”ஆன கெஜ்ரிவால்! மேடையிலேயே கொப்பளித்து கொட்டிய கண்ணீர்
டெல்லி: டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அர்விந்த் கெஜ்ரிவால் மணிஷ் சிசோடியாவின் பெயரை சொல்லி மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதார்.
டெல்லியில் பவானா பகுதியின் புறநகரில் அமைந்து உள்ளர் தரியாபுர் கிராமத்தில் 'ஸ்கூல் ஆஃப் ஸ்பெஷலைஸ்டு எக்ஸலன்ஸ்' என்ற பெயரில் புதிய கல்வி நிறுவனம் அமைக்கப்பட்டு இன்று திறப்பு விழா கண்டது. இந்த திறப்பு விழாவில் டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அர்விந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்த கல்வி நிறுவனத்தி திறந்து வைத்து உரையாற்றி அவர், டெல்லி முன்னாள் கல்வி அமைச்சர் மனிஷ் சிசோடியா இந்த துறைக்காக ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்தார். அப்போது அவரது கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது. தொடக்கத்தில் அவர் அழுகையை கட்டுப்படுத்த முயன்ற நிலையில், அவரையும் மீறி கண்களில் இருந்து கண்ணீர் கொப்பளித்தது.
துக்கம் தொண்டையை அடைக்க ஒரு கட்டத்தில் பேச முடியாமல் சில வினாடிகள் இடைவெளிவிட்டு தண்ணீரை அருந்திய பிறகு மீண்டும் பேசத் தொடங்கினார் அர்விந்த் கெஜ்ரிவால். "பாஜக அவரை பொய் வழக்குகளில் சிறையில் அடைத்து இருக்கிறது. ஒருவேளை மணிஷ் சிசோடியா அவர்கள் நல்ல பள்ளிகளை கட்டாமல் இருந்திருந்தால், அவரை அவர்கள் சிறையில் அடைத்திருக்க மாட்டார்கள்.
அவர்கள் கல்வி புரட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால், நாங்கள் கல்வி புரட்சியை முடிவுக்கு கொண்டு வர விடமாட்டோம். இது மணிஷ் சிசோடியாவின் கனவு. தேசிய தலைநகரில் வசிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.
டெல்லி அரசு பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க தொடங்கினார்கள். போட்டித் தேர்வுகளிலும் அவர்கள் சிறப்பாக செயல்பட்டு மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், போலீஸ் அதிகாரிகளாகவும் ஆயினர். இந்த அளவுக்கு கல்வி வளர்ச்சி அடைந்து இருப்பதற்கு பின்னால் ஒரு மனிதர் இருக்கிறார். அவர்தான் மணிஷ் சிசோடியா." என்று உணர்ச்சிப்பூர்வமாக பேசினார் அர்விந்த் கெஜ்ரிவால்
கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி டெல்லியின் முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவை மதுக் கொள்கை விவகாரத்தில் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக சிபிஐ கைது செய்தது. அதை தொடர்ந்து தனது துணை முதலமைச்சர் பதவியை மணிஷ் சிசோடியா ராஜினாமா செய்தார்.
டெல்லி உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கவும் மறுத்தது. மணிஷ் சிசோடியா மீது வைக்கப்படும் புகார்கள் மிகவும் தீவிரமானவை என்று தெரிவித்த டெல்லி உயர்நீதிமன்றம், அவர் சாட்சிகளை மாற்றுவதற்கான வாய்ப்பு இருப்பதால் ஜாமின் வழங்க முடியாது என்று மறுத்தது.












Click it and Unblock the Notifications