"ஆதாரம் இருக்கு!" அமலாக்க துறையையே உளவு பார்த்த கெஜ்ரிவால்! கைதில் இருந்து தப்பிக்க திட்டம்?
டெல்லி: டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் இப்போது கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் அமலாக்கத் துறை செயல்பாடுகளைத் தொடர்ந்து உளவு பார்த்து வந்ததாக இப்போது பரபர தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி ஆம் ஆத்மி அரசுக்கு மதுபான கொள்கை வழக்கு பெரும் தலைவலியாக மாறி இருக்கிறது. கடந்த 2011-22 காலகட்டத்தில் டெல்லியில் புதிய மதுபான கொள்கை கொண்டு வரப்பட்டது. இதில் ஊழல் நடந்ததாகப் புகார் எழவே ஆளுநர் விசாரணைக்கு உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து இந்த வழக்கை அமலாக்கத் துறை விசாரணைக்கு எடுத்த நிலையில், அதன் பிறகு பல பகீர் சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த வழக்கில் தான் டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு இருந்தார்.
கெஜ்ரிவால் கைது: இப்படி இந்த மதுபான கொள்கை வழக்கு என்பது நீண்ட காலமாகவே ஆம் ஆத்திக்குத் தலைவலியாகவே இருந்துள்ளது. இந்த வழக்கில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட வாய்ப்புகள் அதிகம் எனக் கடந்த பல மாதங்களாகவே தகவல்கள் பரவி வந்தன. இந்தச் சூழலில் இதில் இப்போது கெஜ்ரிவால் மற்றும் அமலாக்கத் துறை தொடர்பாக சில பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது.
உளவு பார்த்த கெஜ்ரிவால்: அதாவது அவர் இத்தனை காலமாக அமலாக்கத் துறை செயல்பாடுகளை உளவு பார்த்ததாக இப்போது பரபர தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான ஆதாரங்களை அமலாக்கத் துறை கண்டுபிடித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையும் கூட அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அமலாக்கத் துறை தரப்பு திட்டமிட்டுள்ளது.
இது மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் மதுபான கொள்கை தொடர்பாகப் பல முறை கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. இருப்பினும், அவை எதற்கும் கெஜ்ரிவால் ஆஜராகவே இல்லை. தான் நேரில் ஆஜரானால் கைது செய்யப்படுவோம் என்பதால்தான் கெஜ்ரிவால் நேரில் ஆஜராகாமல் தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் அவர் உளவு பார்த்ததாக வெளியான தகவல் பகீர் கிளப்புவதாக இருக்கிறது.
அடுத்து என்ன: கெஜ்ரிவால் தரப்பு தனது கைதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்ததை எதிர்த்து கெஜ்ரிவாலின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. இந்த மனுவை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் நீதிபதி பேலா திவேதி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரிக்க இருந்தது.
இதற்கிடையே கெஜ்ரிவால் விவகாரத்தின் மீது எந்த முடிவும் எடுப்பதற்கு முன் தங்கள் தரப்பைக் கேட்க வேண்டும் என்று அமலாக்கத் துறையும் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்து இருந்தது. இதற்கிடையே இப்போது கெஜ்ரிவால் தரப்பு தனது உச்ச நீதிமன்ற மனுவை திடீரென வாபஸ் பெற்றுள்ளது. கைதுக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டை நாட ஜெக்ரிவால் தரப்பு முடிவு செய்துள்ளது.
இந்த மதுபான கொள்கை விவகாரம் தொடர்பாக இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மணிஷ் சிசோடியா ஒரு ஆண்டிற்கு மேலாகச் சிறையில் இருக்கிறார். அதேபோல டெல்லி ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கைதானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பிஆர்எஸ் தலைவர் கேசிஆரின் மகள் கவிதா கைது செய்யப்பட்ட நிலையில், இப்போது கெஜ்ரிவால் மீதும் நடவடிக்கை பாய்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications