ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிரான குற்றப்பத்திரிகை மீது விசாரணை தொடக்கம்
டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிரான குற்றப்பத்திரிகை மீது டெல்லி நீதிமன்றம் விசாரணையை தொடங்கியுள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்ததில் முறைகேடு என்பது சிபிஐ வழக்கு. இந்த அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்ததில் அப்போதைய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் ஆதாயமடைந்தனர் என்பது குற்றச்சாட்டு.

இவ்வழக்கில் ஆகஸ்ட் 21-ந் தேதி ப. சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ அவரை டெல்லி திகார் சிறையில் அடைத்துள்ளது. இதனிடையே ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கப் பிரிவும் திகார் சிறையில் வைத்து ப. சிதம்பரத்தை கைது செய்தது.
இந்நிலையில் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ டெல்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் அரசு தரப்பு சாட்சியாக ஐ.என்.எக்ஸ் மீடியா உரிமையாளர்களில் ஒருவரான இந்திராணி முகர்ஜி மாறிவிட்டதாகவும் அவருக்கு கருணை காட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த குற்றப்பத்திரிகை மீதான விசாரணையை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தொடங்கியுள்ளது. இதனையடுத்து இவ்வழக்கில் வரும் 24-ந் தேதி ப.சிதம்பரத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications