"இடைக்கால ஜாமீன் இல்லை.." நாளை திகார் சிறை செல்கிறார் கெஜ்ரிவால்.. டெல்லி நீதிமன்றம் சொல்வது என்ன?
டெல்லி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தனது ஜாமீனை நீட்டிக்கக் கோரி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஜூன் 5ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என டெல்லி நீதிமன்றம் கூறியுள்ள நிலையில், அவர் நாளை திகார் சிறையில் சரணடைய உள்ளார்.
கடந்த 2022 இறுதியில் டெல்லியில் கொண்டு வரப்பட்ட மதுபான கொள்கை அங்கு ஆளும் கட்சியாக உள்ள ஆம் ஆத்மிக்கு அடுத்தடுத்து சிக்கலைக் கொடுத்து வருகிறது. அந்த மதுபான கொள்கை அப்போதே வாபஸ் பெறப்பட்டுவிட்ட போதிலும் பல ஆம் ஆத்மி தலைவர்கள் இதில் சிக்கி வருகிறார்கள்.

ஏற்கனவே டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஓராண்டிற்கு மேலாக இந்த வழக்கில் சிறையில் இருக்கிறார். இதற்கிடையே டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.
கெஜ்ரிவால்: இந்தச் சூழலில் தான் அவருக்குக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியது. இந்த இடைக்கால ஜாமீன் நாளையுடன் நிறைவடையும் நிலையில், அவர் நாளை சரணடைய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே இடைக்கால ஜாமீனை மேலும் ஒரு வாரம் நீட்டிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்திருந்தார். அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அவரது தரப்பு கோரிக்கை விடுத்த போதிலும் அதை அவசரவழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இதன் காரணமாக அவர் மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் ஜாமீன் கோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
கடும் எதிர்ப்பு: இது தொடர்பான வழக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமீன் வழங்க அமலாக்கத் துறை மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. உடல்நிலை சரியில்லை என்று கெஜ்ரிவால் கூறும் போதிலும் பிரச்சாரம் செய்வதை அவரது உடல்நிலை தடுக்கவில்லை என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த விகாரத்தில் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.












Click it and Unblock the Notifications