டெல்லி மருத்துவர் தற்கொலை.. "சாவுக்கு ஆம் ஆத்மி எம்எல்ஏதான் காரணம்".. தற்கொலை கடிதம் சிக்கியது!
டெல்லி: தன்னை மிரட்டி பணம் பறித்ததாக ஆம்ஆத்மி எம்எல்ஏ மீது குற்றம்சாட்டிய டெல்லி மருத்துவர் நேற்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி நேபி சாராய் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திர சிங் (52). இவருக்கு சொந்தமாக தண்ணீர் விநியோகிக்கும் லாரிகள் உள்ளன. இந்த நிலையில் இவர் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்போது அவர்கள் தற்கொலைக்கான கடிதத்தை கைப்பற்றினர்.
அதில் அவர் கூறுகையில் தனது தற்கொலைக்கு தேவ்லி எம்எல்ஏ பிரகாஷ் ஜர்வால் மற்றும் அவரது உதவியாளர் கபில் நாகர் ஆகியோரே காரணம் என தெரிவித்துள்ளார். மேலும் ராஜேந்திர சிங் எழுதியிருந்த டைரியையும் போலீஸார் கைப்பற்றினர்.
அதில் அவர் கூறுகையில் எனது டேங்கர் லாரிகளை டெல்லி குடிநீர் வாரியத்திற்கு வாடகைக்காக கொடுத்திருந்தேன். அதற்காக என்னிடம் எம்எல்ஏ ஜர்வால் லஞ்சம் கேட்டார். நான் கொடுக்க மறுத்ததால் எனது டேங்கர் லாரிகளை டெல்லி குடிநீர் வாரிய சேவையிலிருந்து நீக்கினார். பின்னர் எனக்கு கொலை மிரட்டலையும் விடுத்தார் என அந்த டைரியில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சுமார் 2 பக்கங்கள் கொண்ட தற்கொலை கடிதத்தை தொடர்ந்து போலீஸார் எம்எல்ஏ மற்றும் அவரது உதவியாளருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர். மருத்துவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. எம்எல்ஏ ஜர்வால் மீது கடந்த 2018-ஆம் ஆண்டு பெண்ணை மிரட்டியதாகவும் ஒரு புகார் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications