எக்ஸிட் போல்: இவர் முகத்திற்காகவே விழுந்த ஓட்டுக்கள்.. மோடி அலையை ஆஃப் செய்து கெஜ்ரிவால் புதிய சாதனை
டெல்லி: டெல்லியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை பார்க்கும் போது பெண்கள், முதல் முறை வாக்காளர்களின் தேர்வு என்னவாக இருக்கிறது என்பதை காண முடிகிறது.
தலைநகர் டெல்லியில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து முதல்வராக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்வு செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து இந்த ஆட்சியின் பதவிக்காலம் வரும் 15-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து டெல்லிக்கு நேற்று ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.
ஆட்சி
இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி ஏற்பட்டது. இந்த தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் ஆம் ஆத்மி கட்சியே ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என கணிக்கப்பட்டது.
ஆம் ஆத்மி ஆட்சி
இதைத் தொடர்ந்து நேற்று மாலை 6 மணிக்கு மேல் வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. இதில் இந்தியா டுடே, டைம்ஸ் நவ், ரிபப்ளிக், இந்தியா டிவி, நியூஸ் எக்ஸ் உள்ளிட்ட அனைத்து கருத்துக் கணிப்புகளிலும் ஆம் ஆத்மி கட்சியே ஆட்சியில் தொடரும் என கூறப்பட்டுள்ளது.
முதல் முறை வாக்காளர்கள்
இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என எக்ஸிட் போல் முடிவுகளை பார்க்கும் போது ஒரு விஷயம் நன்றாக புலப்படுகிறது. அதாவது ஆம் ஆத்மி கட்சிக்கு ஆண்களை காட்டிலும் 6 சதவீதத்திற்கும் மேற்பட்ட பெண்கள் வாக்களித்துள்ளனர். அது போல் இளைஞர்கள், மாணவர்கள், முதல் முறை வாக்காளர்கள் என பெரும்பாலானோர் ஆம் ஆத்மியை தேர்வு செய்துள்ளனர்.
ஆம் ஆத்மி
ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்தது ஏன் என சர்வே எடுத்ததில் இந்த தேர்தலில் முக்கிய பிரச்சினையாக வளர்ச்சி திட்டங்கள் முன்னிலை வகிக்கிறது. பணவீக்கத்தால் 17 சதவீதம் பேரும், வேலையின்மையால் 14 சதவீதம் பேரும், தேசிய பாதுகாப்பு பிரச்சினையால் 7 சதவீதம் பேரும் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை. ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களின் தொகுதி மக்களுக்கு அவர்களின் செயல்பாடுகளில் அதிருப்தி நிலவிய போதிலும் ஆம் ஆத்மிக்காகவே வாக்களித்ததாக கூறப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் பெண்களுக்காக இலவச பேருந்து, மெட்ரோ ரயில் பயண திட்டம், இலவச குடிநீர், மின்சாரம் உள்ளிட்டவையும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பெண்களும், இளைஞர்களும் விரும்பியதும் தெரிகிறது. கடந்த 5 ஆண்டுகளாக ஆம் ஆத்மியின் செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக இருந்ததாகவே கூறப்படுகிறது.