டெல்லியில் காங்கிரசுக்கு இப்படி ஒரு நிலையா.. 60 வருடம் ஆண்ட கட்சி.. சொல்லி வைத்தார் போல் கணிப்புகள்
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தல் தொடர்பான கணிப்புகள் எல்லாவற்றையும் பார்த்தால் காங்கிரஸ் கட்சி பூஜ்ஜியம் அல்லது அதிகபட்சம் இரண்டு இடங்களை வெல்லும் என்றே கூறியுள்ளன. குறிப்பாக முக்கிய நிறுவனங்கள் வெளியிட்ட கணிப்புகள் எல்லாமே காங்கிரஸ் பூஜ்ஜியம் அல்லது ஓரிரு இடங்களை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 60 வருடங்களாக நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி, தலைநகரான டெல்லியில் கடந்த 2015 முதலே ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாமல் தவித்து வருகிறது.
ஷீலா தீட்சித்தை தோற்கடித்து கடந்த 2013ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மியால், டெல்லியில் காங்கிரஸ் கிட்டத்தட்ட காணாமல் போனது என்று சொல்லும் அளவிற்கு நிலைமை மாறியது. 2015ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் சரி, 2020 ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் சரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி பெற்ற வெற்றி பாஜக, காங்கிரஸ் கட்சிகளை அதிர வைத்தது.

ஏனெனில் 2015ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி டெல்லியில் 67 இடங்களில் வென்றது. பாஜக வெறும் 3 இடங்களில் மட்டுமே வென்றது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.. 2020ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி 62 இடங்களில் வென்றது. பாஜக 8 இடங்களில் வென்றது. காங்கிரஸ் கட்சி 2020 சட்டசபை தேர்தலிலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை..
இதன் காரணமாக அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கடந்த 10 வருடங்களுக்கு மேலாக ஆட்சியில் இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதில் டெல்லி முதல்வராக ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் அதிஷி இருந்து வருகிறார். தேர்தலில் வென்ற பின்னரே முதல்வராக பதவியேற்பேன் என்று கெஜ்ரிவால் கூறியிருந்தார்.
இந்நிலையில், 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபையின் தற்போதைய பதவிக்காலம் வருகிற 23-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு கடந்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். அதேநேரம் வாக்குப்பதிவு சதவீதம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்று சொல்லப்படுகிறது. 70 தொகுதிகளிலும் மொத்தம் 699 பேர் போட்டியிட்டனர். இதில் ஆம் ஆத்மி, பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டியாக இருந்தது.
இந்நிலையில் தேர்தல் மாலை 6 மணிக்கு முடிந்த நிலையில் பல்வேறு தொலைக்காட்சிகள், செய்தி நிறுவனங்கள் டெல்லி எக்ஸிட் போல் தொடர்பான கணிப்புகளை வெளியிட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 10க்கும் மேற்பட்ட கணிப்புகள் வெளியாகி உள்ளன. இதில் பெரும்பாலான கணிப்புகள் டெல்லியில் இந்த முறை பாஜக தான் ஆட்சியை பிடிக்கும் என்று கூறியுள்ளன. பாஜக டெல்லி லோக்சபா தேர்தலில் கடந்த 2014, 2019, 2024 என எல்லா முறையும் வென்ற போதும், சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சியை பிடிக்க முடியவில்லை..
கடைசியாக பாஜக இங்கு 27 வருடங்களுக்கு முன்பு ஆட்சியில் இருந்தது. அதன்பிறகு 27 வருடங்களாக போராடி வருகிறது. இப்போது கணிப்புகள் பெரும்பாலும் பாஜக 35 முதல் 35 இடங்களை பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று கூறியுள்ளன. ஆம் ஆத்மியை பொறுத்தவரை சராசரியாக 25 முதல் 30 இடங்களை பிடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளன. இதை பார்க்கும் போது பாஜக வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்றாலும், போட்டி கடுமையாக இருக்கும் என்றே சொல்லப்படுகிறது.
அதேநேரம் இந்த கணிப்புகள் எல்லாவற்றையும் பார்ர்த்தால் காங்கிரஸ் கட்சி பூஜ்ஜியம் அல்லது அதிகபட்சம் இரண்டு இடங்களை வெல்லும் என்றே கூறியுள்ளன. குறிப்பாக முக்கிய நிறுவனங்கள் வெளியிட்ட கணிப்புகள் எல்லாமே காங்கிரஸ் பூஜ்ஜியம் அல்லது ஓரிரு இடங்களை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 60 வருடங்களாக நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி, தலைநகர் டெல்லியில் கடந்த 2015 முதலே ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாமல் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications