இலவச சைக்கிள், ஸ்கூட்டி.. திமுக, அதிமுகவை காப்பி அடித்த பாஜக.. டெல்லி தேர்தல் அறிக்கையில் செம!
டெல்லி: டெல்லிக்கான 'சங்கல்ப பத்திரம்' என்ற பெயரில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஏழைகளுக்கு இரண்டு ரூபாய் விலையில் ஒரு கிலோ கோதுமை மாவு வழங்கப்படும் என்பது உட்பட பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன.
டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 8ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கே மாநிலத்தில் ஆளக்கூடிய, ஆம் ஆத்மி, மத்தியில் ஆளும், பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே தீவிர போட்டி நிலவி வருகிறது.
களம் இறங்கியது ராணுவம்.. வுஹானில் இருந்து திரும்பும் இந்தியர்களுக்காக.. பெரும் கூடாரம் அமைப்பு!
தேர்தல் அறிக்கை
இந்த நிலையில் பாஜக சார்பில், அதன் டெல்லி மாநில தலைவரான மனோஜ் திவாரி, கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் இவை தான்: பாஜக ஆட்சிக்கு வந்தால் ஊழலற்ற அரசு நிர்வாகத்தை கொடுப்போம். புதிதாக அங்கீகரிக்கப்பட்ட குடியிருப்புகளுக்கு வளர்ச்சி வாரியம் அமைக்கப்படும். நகர மக்கள் ஒவ்வொருவருக்கும் சுத்தமான குடிநீர், வீட்டு குடிநீர் குழாய் மூலமாகவே வழங்கப்படும்.
தண்ணீர்
தண்ணீர் லாரிகளை நம்பிக் கொண்டிருக்கும் நிலை சுத்தமாக இல்லாமல் போகும். மத்திய அரசின் ஆயுஷ்மான் யோஜனா, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா மற்றும் கிசான் சம்மான் யோஜனா போன்ற திட்டங்களை டெல்லியில் நாங்கள் அமல்படுத்துவோம். புதிதாகப் பிறக்கக்கூடிய ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் இரண்டு லட்ச ரூபாய் டெபாசிட் செய்யப்படும்.
இலவசம்
கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய ஏழை மாணவிகளுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இலவசமாக வழங்கப்படும். ஏழை கைம்பெண்களின் மகள்களுக்கு திருமணம் ஆகும்போது, 51 ஆயிரம் ரூபாய் அரசு உதவித்தொகை வழங்கும். ஒன்பதாம் வகுப்பு படிக்க கூடிய மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும்.
இளைஞர்களுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
வேலைவாய்ப்பு
பெண்களின் பாதுகாப்புக்காக ராணிலட்சுமிபாய் திட்டம் கொண்டு வரப்படும். தெருவோர வியாபாரிகளுக்கு, புதிய ஒழுங்குமுறைகள் வழங்கப்படும். கட்டுமான தொழிலாளர்களுக்கு வேலை உறுதி தரப்படும். பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். யமுனை நதிக்கரையில் படித்துறை அமைக்கப்பட்டு, தினமும் ஆரத்தி வழிபாடு நடைபெற ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.