ரயிலுக்குள் திடீரென பார்த்தால் ஹாயாக பிகினியில் பெண்.. அநாகரீகம்.. டெல்லி மெட்ரோ அறிக்கை
டெல்லி: டெல்லி மெட்ரோ ரயிலில் பிகினி ஆடையுடன் வந்த பெண்ணால் சர்ச்சை எழுந்த நிலையில் கண்ணியமான ஆடைகளை அணிந்து வர வேண்டும் என டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் அறிவுரை வழங்கியுள்ளது.
ஆள் பாதி ஆடை பாதி என்ற பழமொழிக்கேற்ப நாம் அணியும் ஆடைகள்தான் நம் நாட்டின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தை பறைசாற்றுகின்றன. அந்த ஆடைகள் மற்றவர்கள் மதிக்கும் அளவுக்கு இருக்க வேண்டும்.
ஆனால் சிலர் மற்றவர்கள் கிண்டல் செய்யும் வகையில் ஆடைகளை அணிந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. என்னதான் ஆடை அணிவது அவரவர் சுதந்திரம் என்றாலும் மற்றவர்களின் பார்வை தடம் மாறும் அளவுக்கு அணியக் கூடாது என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது.

ஆடை
யார் எந்த ஆடை அணிந்தாலும் உங்கள் பார்வையில் கோளாறை வைத்துக் கொண்டு பெண்களின் ஆடையை ஏன் விமர்சிக்கிறீர்கள் என்ற இரு வேறு கருத்துகளும் வரத்தான் செய்கின்றன. டெல்லியில் மெட்ரோ ரயிலில் இளம்பெண் ஒருவர் நீச்சல் குளத்தில் அணியும் உள்ளாடையுடன் பயணம் செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ வைரல்
இந்த உடை குறித்து வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த வீடியோவில் இளம்பெண் ஒருவர் ஒரு இருக்கையில் அமர்ந்திருக்கிறார். அவர் மேல் ஒரு கருப்பு நிறத்தில் பெரிய பை இருக்கிறது. அவர் இறங்கும் இடம் வந்த போது அவர் எழுந்து நிற்கிறார். அப்போதுதான் அவரது ஆடையை கண்டு அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்குகிறார்கள்.

கண்டும் காணாமல் இருந்த சிலர்
சிலர் இந்த பெண்ணின் உடையை கண்டும் காணாமல் இருந்துவிட்டனர். சிலர் முகம் சுளித்தனர். இந்த பிகினி ஆடை குறித்து விவாதம் எழுந்துள்ளது. இதில் வழக்கம் போல் ஆதரவும் எதிர்ப்பும் இருந்து வருகிறது. சமூகவலைதளத்தில் ஒருவர் அவர் அருகில் இருந்த பெண்ணின் நிலையையும் சுற்றி இருந்த ஆண்களின் மனநிலையையும் எண்ணிப் பார்க்கிறேன் என பதிவு செய்துள்ளார்.

ஏசி வேலை செய்யலையா
இன்னொருவரோ மெட்ரோ ரயிலில் ஏசி வேலை செய்யவில்லையா என கிண்டலாக கேட்டுள்ளார். மற்றொருவரோ அவரது உடையின் முன்பாகத்தில் ஒரு பகுதி கத்தரிக்கப்பட்டது போல் இருந்ததால் என்ன எலி கடித்துவிட்டதா என கேட்டுள்ளார். இப்படி இருக்கையில் சிலர் ஆடை அணிவது அவரவர் தனிப்பட்ட உரிமை, இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. பார்ப்போரின் பார்வையில்தான் பிரச்சினை என பதிவிட்டுள்ளனர்.

உள்ளாடையுடன் வந்த ஆண் மீது மட்டும் வழக்கு
அண்மையில் உள்ளாடையுடன் மெட்ரோவில் பயணித்த ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆண் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்துள்ளீர்களே! இந்த பெண்ணும் உள்ளாடையுடன்தான் பயணித்துள்ளார். அவர் மீது ஏன் இன்னமும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மெட்ரோ நிறுவனம் அறிவுரை
இந்த நிலையில் டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் அதன் பயணிகள் சமூக ஒழுங்குமுறையை பேணும் வகையில் கண்ணியமான ஆடைகளை அணிந்து வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் மற்றும் மெயின்டனன்ஸ் சட்டத்தின்படி பிரிவு 59இன் கீழ் அநாகரீகமான ஆடை அணிந்து பயணிப்பது குற்றமாகும். தான் விரும்பிய ஆடையை அணிவது தனிப்பட்ட சுதந்திரம்தான். ஆனாலும் பொது போக்குவரத்தில் இது போன்ற அநாகரீகமான ஆடை அணிந்து வருவதை தவிர்க்குமாறு டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications