அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான அனைத்து வழக்குகள் மீதும் ஆக. 25-ல் விசாரணை: டெல்லி ஹைகோர்ட்
டெல்லி: மத்திய பாஜக அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான அனைத்து வழக்குகள் மீதும் ஆகஸ்ட் 25-ந் தேதி விசாரணை நடைபெறும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு புதிய ராணுவ ஆட்சேர்ப்புக் கொள்கையாக அக்னிபாத் திட்டத்தை அறிவித்தது. ராணுவத்தின் முப்படைகளிலும் குறுகிய காலம் மட்டுமே ராணுவத்தில் பணி செய்ய வகை செய்யக் கூடியது அக்னிபாத் திட்டம்.
அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன. வட இந்திய மாநிலங்களில் இந்த போராட்டம் தீவிரமாக நடைபெற்றது.

வட இந்திய மாநிலங்களில் நடைபெற்ற போராட்டத்தின் போது 60க்கும் மேற்பட்ட ரயில்கள் எரிக்கப்பட்டன. ரயில் நிலையங்கள் சூறையாடப்பட்டன. இதனால் ரயில் சேவைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. ஆனாலும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
மேலும் அக்னிபாத் திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகளை நிறைவு செய்த அக்னி வீரர்கள், மத்திய ஆயுத காவல்படை மற்றும் அஸ்ஸாம் ரைபிள் படைகளில் சேர 10% காலி இடங்கள் அவர்களுக்கு ஒதுக்கப்படும். மத்திய ஆயுத காவல்படை மற்றும் அஸ்ஸாம் ரைபிள் படைகளில் அக்னி வீரர்களை பணியிலமர்த்துவதற்கு அறிவிக்கப்பட்டுள்ள அதிகபட்ச வயது வரம்பை விட 3 ஆண்டுகள் தளர்வு வழங்கப்படும்; அக்னிவீரரின் முதல் பிரிவிற்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச வயது வரம்பைத் தாண்டி 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும் எனவும் மத்திய அரசு விளக்கம் அளித்திருந்தது.
அத்துடன் அக்னி வீரர்களின் கல்வி மற்றும் திறனுக்கு ஏற்ப அவர்களுக்கு சலுகைகள், தளர்வுகள் ஆகியவற்றின் மூலம் பொருத்தமான வேலை வாய்ப்புகளை வழங்க பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் ஆராய வேண்டும் எனவும் மத்திய அரசு கூறியது. அக்னி வீரர்களுக்கு திறனை மேம்படுத்த கடன் வசதிகள், வணிகம் மேற்கொள்வதற்கும், சுய தொழில் அமைப்பதற்குமான கல்வி ஆகியவற்றின் மூலம் அவர்களுக்கு உதவுவதற்கான சாத்தியக் கூறுகளை வங்கிகள் ஆராய வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியது.
இத்திட்டத்துக்கு எதிராக நாட்டின் பல உயர்நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றத்திலும் பல பொதுநலன் வழக்குகள் தொடரப்பட்டன. இவ்வழக்குகள் அனைத்தையும் டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இன்று இந்த வழக்குகள் மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது இவ்வழக்குகள் மீதான விசாரணை ஆகஸ்ட் 25-ந் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications