"5G"க்கு எதிராக ஜூஹி சாவ்லா தொடர்ந்த வழக்கு டிஸ்மிஸ்.. ரூ.20 லட்சம் அபராதம்- டெல்லி ஹைகோர்ட் அதிரடி
டெல்லி: இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதற்கு எதிராக, நடிகையும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான ஜூஹி சாவ்லா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்துள்ள டெல்லி உயர் நீதிமன்றம் அவருக்கு 20 லட்ச ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் 4ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக 5ஜி அறிமுகமாக உள்ளது. ஏற்கனவே 5ஜி வசதியுடன் கூடிய ஸ்மார்ட் போன்கள் விற்பனை இந்திய சந்தையில் மிகுந்த வரவேற்புடன் தொடங்கிவிட்டது .
அதேநேரம், 5 தொழில்நுட்பத்தால் உருவாகும் கதிர்வீச்சால் பூமியிலுள்ள பல்வேறு உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று ஒரு சாரார் கருத்து தெரிவித்து வருகின்றனர். கொரோனா நோய் பரவலுக்கு 5ஜி தொழில்நுட்பம் காரணம் என்று கோரி ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் 5ஜி தொழில்நுட்ப கோபுரங்களை சிலர் அடித்து உடைத்தது ஞாபகம் இருக்கலாம்.
நடிகை ஜூஹி சாவ்லா நாட்டில் 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜேஆர்.மிதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்ட நீதிபதி வெற்று விளம்பரத்திற்காக இந்த வழக்கு தொடரப்பட்டு உள்ளது என்று கண்டனம் தெரிவித்தார்.
மேலும் 1 வாரம் ஊரடங்கு நீட்டிப்பா.. தளர்வுகள் அறிவிக்கப்படுமா.. அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஸ்டாலின்
மேலும் 20 லட்ச ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார் . சட்ட நடவடிக்கைகளை மனுதாரர் மீறியுள்ளார் நீதிமன்ற வழக்கு விசாரணை லிங்கை மனுதாரர், சோஷியல் மீடியா மூலமாக பகிர்ந்துள்ளார். இதன் பின்னணியில் உள்ளவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் . இது தொடர்பாக டெல்லி காவல்துறை விசாரணை நடத்தி அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, 20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று, ஜூஹி சாவ்லா மற்றும் வழக்கின் பிற, வாதிகளுக்காக ஆஜரான வழக்கறிஞர் தீபக் கோஸ்லா நீதிபதிக்கு வேண்டுகோள் விடுத்தார். எந்தவொரு சட்ட அடிப்படையும் இல்லாமல் அபராதம் விதிக்கப்பட்டதாக அவர் வாதிட்டார்.
ஆனால், இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதி மிதா, "விஷயம் முடிந்துவிட்டது. உங்களிடம் சட்டரீதியான தீர்வுகள் உள்ளன. அதைப் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டார்.
வீலாஷ் மாலிக் மற்றும் டீனா வச்சனி ஆகியோரும் ஜூஹி சாவ்லாவுடன், சேர்ந்து இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தனர். 5 ஜி தொழில்நுட்பம் "பாதுகாப்பானது" என்று சான்றளிக்கும் வரை, அதை அமல்படுத்த அனுமதிக்கக்கூடாது என்பது இவர்கள் தரப்பு வாதம்.
5 ஜி காரணமாக "ஆபத்து ஏற்படக்கூடும்" என்பது ஒரு நிறுவப்பட்ட உண்மை என்று சாவ்லா தரப்பு வாதம் முன் வைத்தது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேள்வி எழுப்பியபோது, 5ஜி தொடர்பாக இந்தியாவில் எந்தவொரு ஆய்வும் நடத்தப்படவில்லை என்பது தெரியவந்தது என்பதால், அதற்கு அனுமதி தரக்கூடாது என்று வாதம் முன் வைக்கப்பட்டது.
ஆனால், மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த வழக்கு ஏற்புடயது இல்லை மற்றும் சிபிசி பிரிவு 9 ன் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.