ரூ100 கோடி லஞ்சம்..தெலுங்கானா முதல்வர் கேசிஆர் மகள் கவிதா 3-வது முறையாக அமலாக்கப் பிரிவு முன் ஆஜர்!
தெலுங்கானா முதல்வர் கேசிஆர் மகள் கவிதா 3-வது முறையாக அமலாக்கப் பிரிவு முன் ஆஜரானார்.
டெல்லி: ரூ100 கோடி லஞ்ச விவகாரத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகளும் அம்மாநில மேல்சபை உறுப்பினருமான கவிதா டெல்லியில் இன்று 3-வது முறையாக அமலாக்கப் பிரிவு முன்பு ஆஜரானார்.
தெலுங்கனா முதல்வர் சந்திரசேகர ராவ் கடந்த சில ஆண்டுகளாக பாஜகவை மிக கடுமையாக எதிர்த்து வருகிறார். பாஜகவின் பி டீம் என்ற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து கேசிஆர் தீவிரமாக எதிர்த்து வருகிறார். தேசிய அளவில் பாஜக, காங்கிரஸ் அல்லாத மாநில கட்சிகளின் கூட்டணிக்கும் அவர் முயற்சித்து வருகிறார். தமது தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி பெயரையும் தேசிய அரசியலுக்காகவே பாரத் ராஷ்டிரிய சமிதி என மாற்றியவர் கேசிஆர்.

இந்த நிலையில் டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு பெரும் புயலாக வீசி வருகிறது. டெல்லி ஆம் ஆத்மி அரசு அறிமுகப்படுத்திய புதிய மதுபான கொள்கை பெரும் சர்ச்சைக்குரியதாக வெடித்தது. இதனால் இந்த கொள்கையையே டெல்லி அரசு கைவிட்டது.
ஆனால் புதிய மதுபான கொள்கையின் மூலம் ஆதாயம் பெறுவதற்காக பெருமளவு லஞ்சம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. டெல்லி ஆம் ஆத்மி அரசுக்கு ரூ100 கோடி லஞ்சம் கொடுத்தது சவுத் குரூப் என்பதும் ஒரு குற்றச்சாட்டு. இந்த வழக்கில்தான் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மொத்தமாக இதுவரை 12 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இந்த ரூ100 கோடி லஞ்ச விவகாரத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கும் தொடர்பு இருக்கிறது என்கிறது அமலாக்கப் பிரிவு. இதனால் கவிதாவை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியது அமலாக்கப் பிரிவு. ஆனால் தமது வீட்டுக்கு வந்து அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தட்டும் என பதில் அனுப்பினார் கவிதா. இதனை அமலாக்கப் பிரிவு ஏற்க மறுத்தது.
இதனையடுத்து டெல்லியில் உள்ள அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் அடுத்தடுத்து விசாரணைக்கு கவிதா ஆஜராகி வருகிறார். தற்போது 3-வது முறையாக டெல்லி அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் கவிதா ஆஜராகி உள்ளார். இந்த விசாரணைகளுக்குப் பின்னர் கவிதா கைது செய்யப்படலாம் எனவும் கூறப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications