எப்புட்ரா.. ஆம்ஆத்மி எம்எல்ஏவையும் விடலையே.. கெஜ்ரிவால் பிரசாரத்தில் ‛‛மெகா’’ திருட்டு.. அடேங்கப்பா!
டெல்லி: டெல்லி மாநகராட்சி தேர்தலையொட்டி அங்கு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரம் மேற்கொண்ட நிலையில் கண் இமைக்கும் நேரத்தில் திருட்டு கும்பல் கைவரிசை காட்டி ஆம்ஆத்மி எம்எல்ஏ உள்பட 20 பேரிடம் ‛முக்கிய' பொருட்களை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி மாநகராட்சிக்கு வரும் டிசம்பர் மாதம் 4ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் ஓட்டுக்கள் டிசம்பர் 7 ம் தேதி எண்ணப்பட உள்ளது.
இந்த மாநகராட்சி சார்பில் பல்வேறு கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இருப்பினும் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி இடையே தான் மும்முனை போட்டி நிலவி வருகிறது.

மும்முனை போட்டி
கடந்த முறை 272 வார்டுகள் இருந்த நிலையில் தற்போது மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 250 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தற்போதைய தேர்தலில் பாஜக, ஆம்ஆத்மி சார்பில் மொத்தம் 250 வார்டுகளுக்கும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். காங்கிரஸ் சார்பில் 3 வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடியானதால் 247 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

பாஜகவை வீழ்த்த வியூகம்
இந்தியாவின் தலைநகராக டெல்லி உள்ளதால் இந்த மாநகராட்சியில் அதிகாரத்தை கைப்பற்ற மூன்று கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் ஆம்ஆத்மி ஆட்சி நடந்தாலும் கூட மாநகராட்சியில் பாஜக தான் அதிகாரத்தில் உள்ளது. கடந்த 2007 முதல் டெல்லி மாநகராட்சியை பாஜக கைப்பற்றி வருகிறது. இதனை தொடர பாஜக முனைப்பு காட்டுகிறது. அதேவேளையில் டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என ஆம்ஆத்மியும், காங்கிரஸ் கட்சியும் பணியாற்றி வருகிறது.

கெஜ்ரிவால் பிரசாரம்
இந்நிலையில் தான் டெல்லி மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் ஆம்ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று வடக்கு டெல்லியில் உள்ள மால்கா காஞ்ச் பகுதியில் தீவிர பிரசாரம் செய்தார். திறந்த வாகனத்தில் நின்றபடி அவர் ஆம்ஆத்மி கட்சிக்கு வாக்கு சேகரித்து வந்தார். இதில் வேட்பாளர்கள், எம்எல்ஏக்கள், தொண்டர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

20 பேரிடம் கைவரிசை
இந்நிலையில் தான் இந்த பிரசாரத்தின்போது ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த எம்எல்ஏ உள்பட 20 பேரின் செல்போன்கள் மாயமாகின. பிரசார கூட்டத்தை பயன்படுத்தி திருடர்கள் கூட்டம் அவர்களிடம் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இந்த திருட்டு சம்பவத்தால் ஆம்ஆத்மி கட்சியின் எம்எல்ஏவான அகிலேஷ் திரிபாதி, ஆம்ஆத்மி கட்சி தலைவரான குட்டி தேவி மற்றும் எம்எல்ஏ சோம்நாத் பாரதியின் செயலாளர் உள்பட பலர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.

தீவிர விசாரணை
இதுபற்றி டெல்லி வடக்கு துணை போலீஸ் கமிஷனர் சாகர் கல்சி கூறுகையில், ‛‛மால்கா காஞ்ச் பகுதியில் ஆம்ஆத்மி பிரசாரத்தின்போது செல்போன்கள் திருடப்பட்டுள்ளன. இதுபற்றிய புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications