விவசாயிகள் போராட்டம்: தண்ணீர் லாரிகளுக்கு காவல்துறை 'செக்' - அமைச்சர் வேதனை
டெல்லி: எல்லையில் போராடும் விவசாயிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட தண்ணீர் லாரிகளை காவல்துறை தடுப்பதாக டெல்லி அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி - உத்தர பிரதேசத்தின் முக்கிய எல்லைப்பகுதியான காஸிப்பூர் எல்லையில் ஏராளமான விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகளை உடனடியாக வெளியேற மாவட்ட நிர்வாகம் நேற்று உத்தரவிட்டது. அவர்கள் வெளியேறாவிட்டால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவர் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்திருந்தார்.

ஆனால், போராட்டக் களத்தில் இருந்து வெளியேறப்போவது இல்லை என அறிவித்த விவசாயிகள், சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால், பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, காஸிப்பூர் எல்லையில் ஆய்வு மேற்கொண்டார். அவரைத் தொடர்ந்து, டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ராகவ் ஆகியோர் சிங்கு எல்லையில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பேசிய அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், 'போராடும் விவசாயிகளுக்காக நாங்கள் ஏற்பாடு செய்த தண்ணீர் மற்றும் கழிவறை வசதி சரியாக கிடைக்கிறதா என்று ஆய்வு செய்யவே இங்கே வந்தோம். ஆனால், தண்ணீர் கொண்டு வரும் லாரிகளை காவல்துறையினர் தடுத்துவிட்டனர். ஆகையால், இங்கு போராட்டக்களத்தில் இன்னும் தண்ணீர் வந்து சேரவில்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications