இவர்களை தூக்கில் போட்டாலும் தவறில்லை.. போலி ரெம்டெசிவிர் தயாரித்து உயிருடன் விளையாடிய கும்பல்கள்
டெல்லி; போலி ரெம்டெசிவிர் மருந்துகளை விற்பனை செய்து வந்த கள்ள மார்க்கெட் கும்பலை குஜராத்தின் வதோதரா போலீசார் பிடித்துள்ளனர். டெல்லியிலும் ஒரு கும்பல் பிடிப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பை சரி செய்யும் மருந்து என நம்பப்படும் ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு நாடு முழுவதும் பெரும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை பெறுபவர்களுக்கு ரெம்டெசிவிர் தான் பரிந்துரை செய்யப்படுகிறது.
ஆனால் மக்கள் எல்லா மாநிலங்களிலும் ரெம்டெசிவிர் மருந்து கேட்டு மருத்துவமனைகளில் குவிந்து வருகிறார்கள். ஆனால் ஸ்டாக் இல்லாத காரணத்தால் தட்டுபாடு நிலவுகிறது.

40000 வரை
கள்ளச் சந்தையில் ரெம்டெசிவிர் புழக்கத்தைக் கட்டுப்படுத்த சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரூ.1,568 என்ற விலையில் தமிழக அரசு விநியோகிக்கத் தொடங்கியது. இதனால் மக்கள் கூட்டம் அங்கு அலைமோதத் தொடங்கி உள்ளது. பல மாநிலங்களில் ரெம்டெசிவர் மருந்து கிடைப்பது இல்லை. கடும் தட்டுப்பாடு நிலவுவதால் கள்ளச்சந்தையில் 20000 முதல் 40000 வரை விற்கப்படுகிறது.

போலி மருந்து
மக்களின் தேவையை காசாக்க துடித்த குஜராத்தை சேர்ந்த ஒரு கும்பல் போலி ரெம்டெசிவிர் மருந்தை விற்று கொள்ளை லாபம் சம்பாதித்து வந்துள்ளது. சாதாரண ஆண்டிபயாட்டிக் மருந்துகளை வாங்கி அதை ரெம்டெசிவிர் என்று போலியான மருந்து அட்டைகளில் மாற்றி பேக்கிங் செய்து விற்று வந்துள்ளார்கள்.

மருந்துகள் பறிமுதல்
குஜராத்தின் வதோதரா போலீசுக்கு இந்த தகவல் கிடைத்ததையடுத்து அந்தகும்பலை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான போலி ரெம்டெசிவிர் மருந்து பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

டெல்லி போலீஸ்
இதேபோல் டெல்லி கிரைம் போலீசார் போலி ரெம்டெசிவிர் மருந்தை உற்பத்தி செய்யும் 7 பேர் கொண்ட கும்பலை கைது செய்துள்ளனர். உத்தரகாண்டில் இவர்கள் போலியாக ஆலை அமைத்து ரெம்டெசிவிர் மருந்தை பேக்கிங் செய்து விற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லி, குஜராத் மட்டுமின்றி நாடு முழுவதுமே போலியாக ரெம்டெசிவிர் மருந்தை தயாரிப்பது அதிகரித்து வருகிறது.












Click it and Unblock the Notifications